கோலாலம்பூர்: ஹாங்காங் அணியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் ஆயுஷ் சுக்லா மாபெரும் சர்வதேச டி20 சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். அவர் ஒரே போட்டியில் தான் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி ஆசிய அளவிலும், உலக அளவிலும் சாதனை படைத்து இருக்கிறார்.
21 வயதான ஆயுஷ் சுக்லா மங்கோலியா அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்த சாதனையை செய்து இருந்தார். மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆயுஷ் சுக்லா முதல் ஓவரில் இருந்து தனது 4 ஓவர் ஸ்பெல்லை ஒரே அடியாக வீசி முடித்தார். அவரது அந்த நான்கு ஓவர்களில் அவர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதே சமயம் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை. ஒரு விக்கெட் மெய்டன் உட்பட நான்கு மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார்.

ஆசிய அளவில் இந்த சாதனையை செய்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். மேலும், உலக அளவில் இந்த சாதனையை செய்யும் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் கனடா அணியின் சாத் பின் ஜபார் மற்றும் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் டி20 போட்டியில் தாங்கள் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி சாதனை படைத்தது இருந்தனர். அவர்கள் வரிசையில் மூன்றாவதாக இணைந்து இருக்கிறார்.
ஆயுஷ் சுக்லா மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள போல்சா என்ற ஊரில் பிறந்தார். 21 வயதே ஆகும் ஆயுஷ் சுக்லா ஹாங்காங் அணியின் முக்கிய பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். இதுவரை 34 போட்டிகளில் 29 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதற்கு முன் கம்போடியா அணிக்கு எதிராக மூன்று ஓவர்களில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். 2022 ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
இந்தப் போட்டியில் மங்கோலியா வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலேயே இது மூன்றாவது மிக குறைந்த ஸ்கோர் ஆகும். இதற்கு முன் ஐஸல் ஆஃப் மேன் என்ற அணி 10 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. இதே மங்கோலியா அணி 2024 மே மாதம் ஜப்பானுக்கு எதிராக 12 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. இந்த இரண்டும் டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோராக உள்ளது.
தற்போது ஹாங்காங் அணிக்கு எதிராக 17 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது மங்கோலியா. இந்தப் போட்டியில் ஹாங்காங் அணி 1.4 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹாங்காங் அணியின் எஹ்சான் கான் 5 ரன்களுக்கு 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். யாசின் முர்தாசா 1 ரன்னுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஆனாஸ் கான் 2 ரன்களுக்கு 2 விக்கெட்களும், அட்டீக் இக்பால் 6 ரன்களுக்கு 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.