மும்பை : ஹாங்காங் சிக்ஸ் தொடரில் இம்முறை இந்திய அணி பங்குபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த தொடர் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக ஹாங்காங் சிக்ஸ் தொடர் நடைபெறாமல் இருந்தது. டி 20 கிரிக்கெட்டுக்கு முன்பு புதுமையான கிரிக்கெட் விதிகளுடன் நடத்தப்பட்ட இந்த தொடர் தற்போது மீண்டும் திரும்புவது ரசிகர்களை குதுகலப்படுத்தி இருக்கிறது.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும் ஆறு வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா ஐந்து ஓவர்கள் தான் போட்டி நடைபெறும். இதனால் இந்த போட்டியில் சிக்ஸர்கள் அதிகமாக பறக்கும். அது மட்டுமில்லாமல் ஐந்து வீரர்கள் விக்கெட் இழந்தால் ஆறாவது வீரர் சிங்கிளாகவே பேட்டிங் செய்யலாம்.
இறுதிப் போட்டியில் மட்டும் ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் வீசப்படும். மேலும் விக்கெட் கீப்பரை தவிர மற்ற ஐந்து வீரர்களும் தலா ஒரு ஓவர் வீச வேண்டும். இதேபோன்று வைடு மற்றும் நோபால்களை வீசினால் இரண்டு ரன்கள் வழங்கப்படும். இந்தத் தொடரில் 12 அணிகள் பங்கு பெற இருக்கிறது.
பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் மோத இருக்கிறது. பாகிஸ்தான அணி ஏற்கனவே ஆறு வீரர்களை கொண்ட அணியை அறிவித்து விட்டது. இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெற்றிகரமான அணியாக விளங்கி இருக்கிறது.
இந்த மூன்று அணிகளும் தலா ஐந்து முறை ஹாங்காங் சிக்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.
இந்திய அணி ஒருமுறை சாம்பியன் பட்டமும்,,ஒரு முறை இறுதிப்போட்டி வரையும் வந்திருக்கிறது. இம்முறை இந்திய அணி திரும்புவதால் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.