ஹாங்காங்: 2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி, அனுபவம் குறைந்த குவைத் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளித்துள்ளது. ஆறு வீரர்கள் மட்டுமே கொண்ட, ஆறு ஓவர் போட்டியாக நடைபெறும் இந்தத் தொடரில், சிறிய பவுண்டரி எல்லைகள் காரணமாகச் சிக்ஸர்கள் பறப்பது வழக்கம்.
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குவைத் அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்து 6 ஓவர்களில் 106 ரன்கள் குவித்தது. ஆனால், இந்திய அணியோ 5.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குவைத் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 1.2 ஓவர்களில் வெறும் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி பெரிய ஸ்கோரை எட்டாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐந்தாம் வரிசையில் களமிறங்கிய யாசின் பட்டேல், யாரும் எதிர்பாராத வகையில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் வெறும் 14 பந்துகளைச் சந்தித்து 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியளித்தார். அவருக்குப் பிலால் தாஹிர் 9 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நல்ல ஆதரவு கொடுத்தார்.
இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறே, பகுதிநேர பந்துவீச்சாளர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் பிரியங்க் பாஞ்சால் மோசமாக பந்துவீசியதுதான். ஆனால், இந்த தொடரில் ஐந்து வீரர்கள் பந்து வீசியே ஆக வேண்டும் என்ற விதி உள்ளது. பந்துவீச்சில் போதிய அனுபவம் இல்லாத தினேஷ் கார்த்திக் மற்றும் பிரியங்க் பாஞ்சால் ஓவர்களை யாசின் பட்டேல் குறிவைத்துத் தாக்கினார்.
தினேஷ் கார்த்திக் வீசிய 5வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 23 ரன்களும், பிரியங்க் பாஞ்சால் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் உட்பட 32 ரன்களும் விளாசப்பட்டது. இதன் விளைவாக, குவைத் அணி 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ராபின் உத்தப்பா சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 ரன்கள், ஸ்டூவர்ட் பின்னி 2 ரன்கள் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அபிமன்யு மிதுன் மட்டும் தனி ஆளாகப் போராடி 9 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். ஷாபாஸ் நதீம் 19 ரன்கள் எடுத்தார். இருப்பினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இந்திய அணி 5.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம், குவைத் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து, இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.