ஹாங்காங்: 2025 ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, மழையின் காரணமாகப் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, DLS (டக்வொர்த் லூயிஸ்-ஸ்டெர்ன்) முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி இரண்டாவது ஓவரின் இறுதியில் ஒரு சிங்கிள் ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தும், அதை எடுக்காதது பின்னடைவுக்குக் காரணமாக அமைந்தது. ஒருவேளை அந்த ரன்னை எடுத்திருந்தால், இந்தப் போட்டி சமனில் முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு சரியாகச் செயல்படவில்லை என்றாலும், சில அதிரடி ஆட்டங்கள் ரன் சேர்க்க உதவின. ராபின் உத்தப்பா 11 பந்துகளில் 28 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) சேர்த்தார். பாரத் சிப்பிலி 13 பந்துகளில் 24 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்தார்.
ஸ்டுவர்ட் பின்னி மூன்றாம் வரிசையில் இறங்கி 2 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நான்காம் வரிசையில் இறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அபிமன்யு மிதுன் 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து, 87 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பாகிஸ்தான் அணி ஆட வந்தது. இதே நாளில் சில மணி நேரங்களுக்கு முன்பு குவைத் அணிக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 124 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றிருந்தது. எனவே, இந்தியா நிர்ணயித்த 87 ரன்கள் என்பது பாகிஸ்தானுக்கு எளிதான இலக்காகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் 18 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கவாஜா 5 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இரண்டாவது ஓவரில் ஸ்டுவர்ட் பின்னி அபாரமாகப் பந்து வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் மாஸ் சதாக்கத் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், அந்த ஓவரில் அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அடுத்து மூன்றாவது ஓவரை ஷாபாஷ் நதீம் வீசினார். அந்த ஓவரில் பாகிஸ்தான் 16 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால், இரண்டாவது ஓவரின் முடிவில் கவாஜா ஒரு ரன் ஓட வாய்ப்பு இருந்தும் அதைச் செய்யவில்லை. மூன்றாவது ஓவரில் மறுமுனை பேட்ஸ்மேன் அப்துல் சமத் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக பேட்டிங் ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் ரன் ஓடவில்லை.
மூன்றாவது ஓவரின் முடிவில் மழை பெய்தது. பாகிஸ்தான் அணி அப்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. மழை நீண்ட நேரம் பெய்ததால், போட்டி அத்துடன் நிறுத்தப்பட்டது. DLS முறைப்படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் அணி அந்த ஒரு ரன்னை ஓடி இருந்தால், இந்த போட்டியின் முடிவு சமனில் முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த இந்திய அணி நாளை (நவம்பர் 8) குவைத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.