ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் இந்திய அணி இந்த தொடரில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து குரூப் சுற்றுடன் வெளியேறியது. .
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ஆறு ஓவர் போட்டியில் சிறிய பவுண்டரி எல்லை கொண்ட மைதானத்திலும் சிக்ஸ் அடிக்க முடியாமல் திணறிய கேதர் ஜாதவ் தான். இதற்கு முந்தைய காலங்களில் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கேதர் ஜாதவ் பல சமயம் டெஸ்ட் போட்டி போல நிதான ஆட்டம் ஆடி தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.

அதனாலேயே அவர் ஐபிஎல் தொடரிலும், இந்திய அணியிலும் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில், அவர் அதிரடியாக ஆட வேண்டிய ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணி குரூப் சி பிரிவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இருந்தது.
அடுத்து குரூப் சி-யில் இடம் பெற்று இருந்த ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக ஆடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கால் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆடியது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் ஆறு ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் துவக்க வீரர் காலித் ஷா 10 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். அவர் 6 சிக்ஸ் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன் சேர்த்தனர். கடைசியாக இறங்கிய ஜாகூர் கான் 11 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 131 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணிக்கு துவக்கம் அளித்து ஆடிய பாரத் சிப்லி 6 பந்துகளில் 20 ரன்களும், மனோஜ் திவாரி 3 பந்துகளில் 10 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். ராபின் உத்தப்பா 10 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். அவர் 3 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருந்தார். நான்காம் வரிசையில் இறங்கிய கேதர் ஜாதவ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடாமல் ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அவரால் ஒரு சிக்ஸ் கூட அடிக்க முடியவில்லை. ஸ்டூவர்ட் பின்னி 11 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெற்றிக்காக தனியாக போராடினார். கடைசி ஓவரில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஸ்டூவர்ட் பின்னி 4 சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். கடைசி பந்தில் 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு ரன் ஓடிய நிலையில் ரன் அவுட் ஆனார்.
இந்திய அணி 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகம் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து இந்திய அணி இந்த தொடரின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. குரூப் சி பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரப அமீரக அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.