ஹாங்காங்: 2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் பங்கேற்ற, நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்திய அணி, ஒரே நாளில் மூன்று அனுபவம் குறைந்த அணிகளிடம் வரிசையாகத் தோல்வியடைந்து, தொடரிலிருந்து மிக மோசமான முறையில் வெளியேறியுள்ளது. ராபின் உத்தப்பா, ஸ்டூவர்ட் பின்னி, தினேஷ் கார்த்திக் போன்ற சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்ததால், இந்திய அணி எளிதாக வெற்றிகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக டிஎல்எஸ் முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றபோதே, அது மழையால் கிடைத்த வெற்றி என்று சில விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று காலை தனது குரூப் 'சி' சுற்றின் கடைசிப் போட்டியில் குவைத் அணியை எதிர்கொண்டது இந்தியா.
முதலில் பேட்டிங் செய்த குவைத் அணி 6 ஓவர்களில் 106 ரன்கள் குவித்தது. ஆனால், இந்திய அணியோ 5.4 ஓவர்களில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியால், இந்திய அணி தனது பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து 'பவுல்' சுற்றுக்குத் தள்ளப்பட்டது. குரூப் சி பிரிவில் இடம் பெற்று இருந்த பாகிஸ்தான் மற்றும் குவைத் அணிகள் நேரடியாக பிளேட் பிரிவின் அரையிறுதிக்கு முன்னேறின.

குரூப் சுற்றில் மூன்றாம் இடம் பிடித்த அணிகளுக்கான பவுல் சுற்றில் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரக (UAE) அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பாரத் சிப்லி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரியங்க் பாஞ்சால் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்கள். பின்னர் அபிமன்யு மிதுனின் அதிரடியான 16 பந்து 50 ரன்கள் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் 14 பந்து 42 ரன்கள் உதவியுடன் 108 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
ஆனால், இந்தியப் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்த ஐக்கிய அரபு அமீரக அணி, 5.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் காலித் ஷா 14 பந்துகளில் 50 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
தொடர்ந்து இரண்டு தோல்விகளால், துவண்ட இந்திய அணி அடுத்த போட்டியில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிலையில் நேபாள அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி, ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் 6 ஓவர்களில் 137 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. சந்தீப் ஜோரா (12 பந்தில் 47), ரஷித் கான் (17 பந்தில் 55), லோகேஷ் பாம் (7 பந்தில் 31) ஆகியோர் இந்தியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
6 ஓவர்களில் 138 ரன்கள் தேவை என்ற நம்பமுடியாத இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க, வெறும் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி ஹாங்காங் சிக்ஸஸ் தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஒரு போட்டி இருந்தாலும், அதில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் இருந்தும், கத்துக்குட்டி அணிகளிடம் இந்தியா அடைந்த இந்தத் தொடர் தோல்விகள், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.