கான்பூர்: 500வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பது பெருமையாக உள்ளது என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி ஆகும்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக இருப்பதில் பெருமையாக உள்ளது என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்ற பிறகு கோஹ்லி முன்னாள் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரியிடம் கூறுகையில்,
இதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக விளையாடிய ஜாம்பவான்களை பார்த்து பிரமித்துள்ளேன். 500வது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக இந்திய அணியை முன்னெடுத்துச் செல்வேன். நான் பெருமைப்படுத்தப்பட்டுள்ளேன் என்றார்.
கோஹ்லி இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 245 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சென்ச்சுரிகளும் அடக்கம். கோஹ்லி இன்றைய போட்டியை சேர்த்து 15 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
அவர் கேப்டனாக இருந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 7 போட்டிகளில் வென்றுள்ளது, 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது மற்றும் 5 போட்டிகளை டிரா செய்துள்ளது.