மும்பை: இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்று அதைத் தக்க வைக்கும் என்று எல்லா ரசிகர்களையும் போல நானும் முழுமையாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் மந்திரா பேடி.
தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தில் பார்த்த மந்திரா பேடி முகத்தை இன்னும் மறக்க முடியவில்லை. அதேபோல சாந்தி டிவி சீரியலில் பார்த்துப் பார்த்து ரசித்த மந்திராவையும் மறக்க முடியவில்லை.
ஆனால் அதையும் தாண்டி மந்திராவுக்கு நிறைய முகங்கள் உள்ளன. எல்லா முகத்திலும் அவர் அழகு மிளிர முத்திரை பதித்தவர். டிவியில் கிரிக்கெட் காம்பயராக அவர் கலக்கியதை, அவர் போட்டு வந்த கவர்ச்சி டிரஸ்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. டிசைனராகவும் இப்போது முத்திரை பதித்து வருகிறார் மந்திரா.
2003 மற்றும் 2007 உலகக் கோப்பைப் போட்டிகளை டிவியில் இவர்தான் காம்பயர் செய்து அசத்தினார். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் அப்போது ஈர்த்து வைத்திருந்தார்.
இவரிடம் இந்தியா 2015 உலகக் கோப்பைப் போட்டியல் எப்படி விளையாடும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னது...
எல்லா இந்திய ரசிகர்களையும் போலவேதான் நானும், நமது அணி இந்தக் கோப்பையையும் வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
நாம்தான் நடப்புச் சாம்பியன். கடந்த தொடர்களில் விளையாடியதை இப்போது பேசத் தேவையில்லை. ஆஸ்திரேலியா எப்படி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளதோ, அதேபோல இந்தியாவாலும் மீண்டும் கோப்பையை வெல்ல இயலும்.
இது ஒரு மாபெரும் போட்டியாக இந்தியாவுக்கு இருக்கும். மறக்க முடியாத போட்டியாக இருக்கும். இந்தியா வெல்லும் என்றார் மந்திரா பேடி.
இது மோடி - பேடி காலம்.. எனவே மந்திரா பேடி சொல்வதும் நடக்கும் - நடக்கட்டும் என்று நம்புவோம்!