ஒருநாள் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி முறையே 3க்கு 1 மற்றும் 3க்கு 2 என்ற கணக்குகளில் வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து புனேவில் நாளை முதல் ஒருநாள் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடரையும் வெற்றி கொள்ள இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
சுதாரித்து வெற்றி கண்ட இந்தியா
டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களின் முதல் போட்டிகளில் இந்திய அணி தடுமாறி தோல்வியை அடைந்த நிலையில், சுதாரித்துக் கொண்டு அந்தந்த மைதானங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுள்ளன.
வெற்றிக்கு இந்தியா தீவிரம்
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஒருநாள் தொடரையும் சிறப்பாக வெற்றி பெற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியிடம் சிறப்பான பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் மற்றும் பௌலர்கள் உள்ளனர். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரகாசமான வெற்றி வாய்ப்பு
ஆனால் தற்போது சொந்த மண்ணில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் உள்ள நிலையில், சூர்யகுமார், க்ருணால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் இந்திய அணிக்கு பலம் கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
சிறப்பான ஸ்பின்னர்கள்
பௌலிங்கிலும் புவனேஸ்வர் குமார், நடராஜன், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் சஹல், குல்தீப் யாதவ், க்ருணால் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களும் எதிரணிக்கு சிறப்பான அச்சுறுத்தலை அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2 தொடர்களில் பெற்ற வெற்றி இந்திய அணிக்கு அதிகமான தன்னம்பிக்கையை அளித்துள்ளது.
வெற்றிக்கு தீவிரம்
இந்நிலையில், கடந்த டி20 தொடரின் தோல்வியை அடுத்து இந்த தொடரை வெற்றி கொள்ள இயான் மார்கன் தலைமையிலான அணி கண்டிப்பாக தீவிரம் காட்டும். ஆயினும் அந்த அணியில் பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.