மும்பை : இந்தியாவில் காசு இருக்கிறவனுக்கு மட்டும் அனைத்தும் கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது பிசிசிஐ. அகமதாபாத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான ஆட்டமாக கருதப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
முதலில் வெளியிடப்பட்ட அட்டவணைப்படி அக்டோபர் 15ஆம் தேதி இந்த போட்டியில் நடைபெறும் என அறிவித்திருந்தார்கள். இதனால் அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் அனைத்தும் தங்களுடைய ரூம் வாடகையை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டு அங்கேயே தங்கி கொள்ளும் வகையில் புக்கிங் செய்ய தொடங்கினர். இந்த நிலையில் தான் பிசிசிஐ இந்தியா பாகிஸ்தான் போட்டியை அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்றியது. இதனால் ஏற்கனவே புக் செய்யப்பட்ட ஹோட்டல்கள் எல்லாம் மீண்டும் மாற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தற்போது இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு இருப்பதை தெரிந்து கொண்ட ஹோட்டல் முதலாளிகள் அக்டோபர் 13 மற்றும் அக்டோபர் 14ஆம் தேதி இரண்டு நாட்கள் தங்குவதற்கு சுமார் மூன்றரை லட்சம் வரை வாடகைக்கு கேட்பதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது. சாதாரண ஹோட்டலில் கூட 3000 ரூபாய் என இருந்த வாடகை உலகக்கோப்பை தொடரில் மட்டும் 60,000 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர். இதனால் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் வந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதிக்கு புக்கிங் செய்தவர்கள் தற்போது அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்ற வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் அதிர்ச்சி செயதி காத்திருக்கிறது.
தற்போது விலை பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும், நீங்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே உங்களால் மாற்ற முடியும் என்றும் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் ஐபிஎல் போட்டியின் போது எப்படி ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினார்களோ அதே போல் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கும் ரசிகர்கள் தூங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.