கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக இந்திய அணிக்கான வீரர்களின் தேர்வில் அதிக பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் மும்பை, குஜராத் அணிகளில் விளையாடும் வீரர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் ஐபிஎல் அணிகளின் நலன் கருதி இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

ஒருவேளை அந்த வீரர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட அணியின் பிராண்ட் வேல்யூ குறையும் என்பதால், ஐபிஎல் அணிகளின் தரப்பிலும் பிசிசிஐ-க்கு அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டதோடு, உலகக்கோப்பை தொடருக்கும் தேர்வு செய்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் ரோகித் சர்மா, திலக் வர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களமிறங்கி இருக்கிறார்கள். இதில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது. உலகக்கோப்பை தொடருக்கு முன் மிடில் ஆர்டர் பேட்டிங்கை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டை இதுநாள் வரை புரிந்து கொள்ளவோ, அதற்கேற்ப தகவமைத்து கொள்ளவோ இல்லை. அதேபோல் அவரால் ஒரு ஓவர் கூட பந்துவீச முடிவதில்லை. இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கே தேர்வு செய்யப்படாத திலக் வர்மாவுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.
ஆனால் முன்னணி பந்துவீச்சாளரான முகமது ஷமிக்கு 8 ஓவர்களுடன் நிறுத்தி இருக்கிறார். இதனால் பல்தான் பாசத்தால் ரோகித் சர்மா மும்பை அணி வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருப்பதாகவும், ரோகித் சர்மாவால் தான் வங்கதேச அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததாகவும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.