மும்பை: பிசிசிஐ செயலாளராக இருந்து வரும் ஜெய் ஷா, ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிலும் 35 வயதிலேயே ஐசிசி தலைவராக வந்துள்ள ஜெய் ஷாவை எதிர்த்து யாருமே போட்டியிடாதது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெய் ஷாவின் கிரிக்கெட் நிர்வாகம் பயணம் தொடங்கிய 16 ஆண்டுகளிலேயே உச்சத்திற்கு வந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
2009ஆம் ஆண்டு குஜராத் சங்க நிர்வாகியாக பயணத்தை தொடங்கிய ஜெய் ஷா, தற்போது ஐசிசி தலைவராக டிசம்பரில் பொறுப்பை ஏற்கவுள்ளார். ஐசிசி தலைவருக்கான தேர்தல் நடைமுறை எளிதான ஒன்று தான். அதாவது ஐசிசியின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் அசோசியேட் நாடுகள் என்று மொத்தமாக 17 நாடுகள் அங்கமாக உள்ளன. இதில் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒரு பிரதிநிதி என்று 17 பேர் இயக்குநர்களாக இருப்பர்.

அந்த 17 இயக்குநர்கள் தான் அடுத்த ஐசிசி தலைவர் யார் என்பதை நாமினேட் செய்வார்கள். தற்போது 17 நாடுகள் தரப்பில் 16 இயக்குநர்கள் இருக்கின்றனர். ஒருவரின் பதவி மட்டும் காலியாக உள்ளது. இந்த நிலையில் 16 உறுப்பினர்களில் பெரும்பான்மையாக ஜெய் ஷாவையே நாமினேட் செய்திருக்கின்றனர். இதன் மூலமாக போட்டியின்றி ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது எப்படி என்பதே பலரின் கேள்வியாக அமைந்துள்ளது. ஐசிசியின் பொருளாதாரம் என்பது பிசிசிஐ-யை மையமாக வைத்தே அமைந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் குறிப்பிட்ட அளவிலான வருமானத்தை ஈட்ட காரணமாக அமைந்தாலும், இந்தியாவின் சந்தை வேறு யாருக்கும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் இந்திய அணியுடன் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறது. ஐசிசி தொடரை நடத்துவதை விடவும் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் மூலம் மிகப்பெரிய வருமானம் ஈட்ட முடியும் என்பதை அறிந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடர் மூலமாக சர்வதேச சந்தையையும் பிசிசிஐ கட்டுப்படுத்த தொடங்கியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் உரிமையாளர்கள் தான் எஸ்ஏ20 லீக், எம்எல்சி தொடர், கரிபியன் பிரீமியர் லீக் என்று ஏராளமான தொடர்களில் முதலீடு செய்துள்ளன. தற்போது ஹன்ட்ரட் தொடரில் ஐபிஎல் உரிமையாளர்களை முதலீடு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்துள்ளது.
ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் கோல்பாக் டீல் காரணமாக இங்கிலாந்துக்கு வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் அனைவருமே ஐபிஎல் ஒப்பந்தத்திற்காக சொந்த நாட்டின் கிரிக்கெட் ஒப்பந்தமே வேண்டாம் என்று கூற தொடங்கியுள்ளனர். இதன் மூலமாக மறைமுகமாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ பிடியில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே ஐசிசி தலைவர் பதவிக்கு வருவதற்கு ஜெய் ஷாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பிசிசிஐ நிர்வாகத்தில் ஜெய் ஷா எளிதாக நிர்வாகம் செய்ய முடிந்ததற்கு அவரின் அரசியல் செல்வாக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் ஐசிசி பொறுப்பில் இருக்கும் போது ஜெய் ஷாவால் அனைத்து முடிவுகளையும் எளிதாக எடுக்க முடியாது. இதனை எப்படி சமாளித்து செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.