
கடைசி ஓவர் த்ரில்லர்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள்தான் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. அந்த அணியின் கைவசம் 6 விக்கெட்டுகளும் இருந்தன. ஆனால், ஆனால் பும்ரா அருமையாக பந்து வீசி வெற்றியை இந்தியா பக்கம் திருப்பினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்திய பும்ராவின் 2வது பந்தில் மொயின் அலி 1 ரன்தான் எடுத்தார்.

வெற்றி
3வது பந்தை சந்தித்த பட்லரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தில் பட்லரை பௌல்ட் செய்தார் பும்ரா. இதனால் கடைசி 2 பந்துகளில் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தை ஜோர்டான் சந்திக்க அதில், 1 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்தை சந்தித்த மொயீன் அலியால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. எனவே இந்த குறைந்த ஸ்கோர் கொண்ட த்ரில் மேட்சில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன்படுத்தியுள்ளது.

6 ரன் போதும்
கடைசி பந்தில் சிக்சர் அடித்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது என்பதால், கடைசி பந்து வரை போட்டி த்ரில்லாக போனது. ஆனால் நரம்புகளை கூல் செய்து கொண்டு அருமையாக பந்து வீசிய பும்ரா வெற்றிக் கனியை தட்டிப்பறித்தார். ஆனால் இவரது இந்த திறமையான பவுலிங்கின் பின்னணியில் இருந்து தட்டிக்கொடுத்தது கேப்டன் விராட் கோஹ்லி என்ற தகவல் பின்னர் வெளியாகியது.

பும்ரா புகழாரம்
போட்டிக்கு பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய பும்ரா, இதுகுறித்து கூறுகையில், கேப்டன் என்மீது வைத்த நம்பிக்கையே வென்றது. நான் எந்த மாதிரி பந்தை வேண்டுமானாலும் வீசிக்கொள்ளலாம் என்ற சுதந்திரதத்தை கோஹ்லி அளித்தார். எனவே எனக்கு எது மிகவும் வசதிகரமான பந்துவீச்சு என உள் மனம் சொன்னதோ அதைப்போன்றே வீசினேன்.

கணித்தேன்
இந்தியா பேட் செய்தபோதே, இந்த விக்கெட்டின் தன்மையை நான் கணித்து விட்டேன். ஸ்டேடியம் மிகப்பெரியது. பிட்ச் ஸ்லோவானது. எனவே நான் லென்த் பந்துகளையும், ஸ்லோ பந்துகளையும் அதிகம் பயன்படுத்தினேன். இது வெற்றியை ஈட்டித் தந்தது என்றார்.

கோஹ்லி நம்பிக்கை
கேப்டன் கோஹ்லி கூறுகையில், பும்ரா கடைசி ஓவரின் ஒவ்வொரு பந்திலும் என்னிடம் ஐடியா கேட்டபடி இருந்தார். ஆனால் நானோ உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதுபோல பவுலிங் போடுங்கள். சிக்சர் போனாலும் பரவாயில்லை. அடுத்த போட்டியில் கற்றுக்கொள்ளலாம். உலகம் ஒன்றும் இத்தோடு முடிந்துவிடாது என்று அட்வைஸ் செய்திருந்தேன். கடைசி பந்தில் 6 ரன் தேவை என்றபோது, லென்த் பந்து போடலாமா என கேட்டார். நான், ஆப்சைடில் ஓவர் பிட்ச் பந்தை வீசச்சொன்னேன். அது ஃபுல்டாசாக மாறினால் கூட பவுண்டரிதான் அடிக்க முடியும். சிக்சர் போகாது, நாம் வென்றுவிடலாம் என்று கூறினேன். இவ்வாறு விராட் கோஹ்லி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications