மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி சற்று மோசமான நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் எனில் இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த போட்டியில் வெற்றி பெறலாம்? என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் களத்தில் உள்ளனர். தற்போது இந்திய அணி 310 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்ந்து விட்ட நிலையில், இந்திய அணியில் தற்போது ரன் குவிக்கக் கூடிய பேட்ஸ்மேன்கள் யார்? என்று பார்த்தால் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய நால்வர் தான்.
இவர்களைத் தவிர்த்து பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே பேட்டிங்கில் மீதம் உள்ளனர். அவர்களை பெரிதாக நம்ப முடியாது என்பதால் இந்த நான்கு வீரர்கள் மட்டுமே பெரிய அளவில் ரன் சேர்க்க வேண்டும். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முயற்சிக்க வேண்டும்.
அதற்கும் குறைவாக எடுத்தால் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் அதிகமாக பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் எடுத்தால் இந்திய அணிக்கு 300- க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும்.
நான்காவது இன்னிங்ஸில் அத்தனை பெரிய இலக்கை எடுத்து வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம். எனவே, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கும் மேல் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு பண்ட், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரை சதம் அடிக்க வேண்டும். அதிலும் அவர்கள் சராசரியாக 70 அல்லது 80 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்திய அணியால் மேலும் 250 ரன்கள் சேர்க்க முடியும்.
இந்த டெஸ்ட் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி முதல் இரண்டு போட்டிகளிலும் சராசரியாக ஒரு இன்னிங்ஸ்-ற்கு 40 ரன்கள் அடித்து இருக்கிறார். எனவே, அவரும் இந்த போட்டியில் ஒரளவு ரன் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி 400 ரன்கள் எடுத்தால் முதல் இன்னிங்ஸில் 50 முதல் 75 ரன்கள் வரை ஆஸ்திரேலிய அணியை விட பின்தங்கிய நிலையில் இருக்கும்.
மேலும் மூன்றாவது நாள் ஆட்டமும் அப்போதும் முடிந்திருக்கும் அந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும் குறைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். அதிகபட்சம் 200 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் 250 ரன்களை ஒட்டிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்படும். நான்காம் நாளின் பின்பகுதி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அந்த இலக்கை நிதானமாக ஆடி எட்ட முயற்சி செய்யலாம். இது மட்டுமே இந்திய அணிக்கு தற்போது இருக்கும் வாய்ப்பு.