
இந்திய அணியில் அறிமுகம்
2004ஆம் ஆண்டு தோனி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதற்கு முன் அவரது கிரிக்கெட் வாழ்வு சுமூகமாக இல்லை. பீகார் அணியிலும், பின் ஜார்கண்ட் அணியிலும் ரஞ்சி ட்ராபி போட்டிகளில் ஆடி வந்தார் தோனி. எனினும், இந்திய அணிக்கு முன்னேறும் வாய்ப்பு சாத்தியமில்லாததாக இருந்தது.

கடினமான காலம்
மும்பை, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களை சேர்ந்த வீரர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில், தோனி முழு நேர கிரிக்கெட்டை விட்டு சிறிது காலம் இரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்தார்.

ரஞ்சி டிராபி
பின்னர் கிரிக்கெட் தான் வேண்டும் என ஒரே மூச்சாக முடிவெடுத்து வேலையை உதறினார். அப்போது அவர் ரஞ்சி டிராபி தொடரில் ஜார்கண்ட் அணியில் இருந்து, கிழக்கு மண்டல அணியில் தேர்வாகி, துலீப் டிராபியில் ஆடினார்.

சையது கிர்மானி
அதன் பின் தான் தோனி இந்திய அணியை நோக்கி முன்னேறத் துவங்கினார். தோனி கிழக்கு மண்டல அணியில் தேர்வாக முக்கிய காரணம் அப்போதைய தேர்வுக் குழு தலைவரும், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் ஆன சையது கிர்மானி.

யாரிடமும் கூறியதில்லை
அது பற்றி அவர் கூறியதாவது - இதை நான் இதற்கு முன் யாரிடமும் கூறியதில்லை. தோனி இப்படி தான் தேர்வு செய்யப்பட்டார். நானும், கிழக்கு மண்டல தேர்வுக் குழு உறுப்பினர் பிரணாப் ராய் இருவரும் ரஞ்சி டிராபி போட்டி ஒன்றை கண்டு கொண்டு இருந்தோம்.

நம்பிக்கை அளிக்கும் இளம் கீப்பர்
அது எந்தப் போட்டி என எனக்கு நினைவு இல்லை. நீண்ட நாட்கள் ஆகி விட்டது. ஆனால், பிரணாப் ராய் தான் இதற்கு ஆதாரம். அவர் என்னிடம் ஜார்கண்டை சேர்ந்த நம்பிக்கை அளிக்கும் ஒரு இளம் கீப்பர் - பேட்ஸ்மேன் இருக்கிறார் என்றார்.

பீல்டிங் செய்த தோனி
நான் அவரிடம் அந்த வீரர் இந்தப் போட்டியில் கீப்பிங் செய்கிறாரா எனக் கேட்டேன். பிரணாப் அதற்கு, இல்லை அவர் ஃபைன் லெக்கில் பீல்டிங் செய்து கொண்டு இருக்கிறார் என்றார். அப்போது தான் நான் தோனியின் இரண்டு வருட புள்ளி விவரங்களை பார்த்தேன்.

கீப்பிங் செய்வதை பார்க்காமல்..
அவரது தொடர்ந்து ரன் குவிக்கும் பேட்டிங் திறனை கண்டு வியந்தேன். விக்கெட் கீப்பிங் செய்வதை கூட பார்க்காமல், தோனியை கிழக்கு மண்டல அணியில் நேரடியாக தேர்வு செய்தேன். அதன் பின் நடந்தது வரலாறு என்று கூறி முடித்தார் சையது கிர்மானி.

சதம்
தோனி அதன் பின் ரன் குவித்து இந்திய அணியில் இடம் பெற்றார். வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவர் அறிமுகம் ஆனார். அதில் சரியாக செயல்படாத அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அணியில் நிரந்தர இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











