நவி மும்பை: 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை அரையிறுதியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றி இந்திய வீராங்கனைகளின் திறமையால் கிடைத்தது என்றாலும், உலக சாம்பியனான ஆஸ்திரேலிய மகளிர் அணி, பல தவறுகளை செய்தது. இந்திய மகளிர் அணியை குறைத்து மதிப்பிட்டது தான் முதல் தவறாக அமைந்தது.
இந்த அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது. இந்திய அணி இந்த சவாலான இலக்கை எட்டி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 89 ரன்களும், ஜெமிமா ரோட்ரீகஸ் 127 ரன்கள் எடுத்தும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இதில் ஆஸ்திரேலியா செய்த தவறுகள் என்ன?

இந்தப் போட்டிக்கு முன்பு வரை, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 60 ஒருநாள் போட்டிகளில் மோதியிருந்தன. அதில் 48-ல் ஆஸ்திரேலியாவே வென்றிருந்தது. இந்த அசைக்க முடியாத ஆதிக்கம், ஆஸ்திரேலிய அணிக்கு ஒருவித மிதமிஞ்சிய நம்பிக்கையை அளித்தது. இந்திய அணி, தங்களுக்கு மிகவும் பழக்கமான நவி மும்பை மைதானத்தில், சொந்த மண்ணில் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுகிறது என்ற முக்கியக் காரணியை அவர்கள் முழுமையாகக் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டனர். இந்தியாவை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற எண்ணம், தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பகலிரவு ஆட்டங்களில், குறிப்பாக இந்தியாவில், இரண்டாவது பாதியில் பனிப்பொழிவின் (Dew Factor) தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது கிரிக்கெட்டின் அடிப்படை. பனிப்பொழிவு இருந்தால், பந்து ஈரப்பதமாகி, பந்துவீச்சாளர்களுக்குப் பிடிமானம் கிடைக்காது; பந்து பேட்டிற்கு எளிதாக வரும். இந்த மிக முக்கிய அம்சத்தை ஹீலி கவனிக்கத் தவறினார். முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய ஸ்கோரை அடித்தால், அழுத்தத்தின் மூலம் இந்தியாவை வீழ்த்திவிடலாம் என அவர் போட்ட கணக்கு, பனிப்பொழிவால் தவிடுபொடியானது.
ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (119), எலிஸ் பெர்ரி (77), மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (63) ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 350 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக, இளம் வீராங்கனை ஸ்ரீ சரணி (2/49) கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். கடைசி 10 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 338 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. அந்த 15 முதல் 20 ரன்கள் குறைந்தது, போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியா கணித்தது போலவே, 339 ரன்கள் என்பது ஒரு மாபெரும் இலக்குதான். ஆனால், அவர்கள் கணிக்கத் தவறிய பனிப்பொழிவு, இந்திய பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. பந்து எளிதாக பேட்டிற்கு வர, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்து ஆடினர். இந்த ஜோடி, அழுத்தத்தால் மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலியாவின் கைகளிலிருந்து வெற்றியைப் பறித்தது.
போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் உடல்மொழி, அவர்கள் இந்தத் தோல்வியை எதிர்பார்க்கவே இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டியது. பெரிய இலக்கைக் கண்டதும், இந்திய அணி அழுத்தத்தில் உடைந்துவிடும் என அவர்கள் நம்பினர். ஆனால், ஜெமிமா - ஹர்மன்ப்ரீத் பார்ட்னர்ஷிப், அழுத்தத்தை அனைத்தையும் ஆஸ்திரேலியா பக்கம் திருப்பியது. தங்களின் வியூகம் முற்றிலும் தவறாகிப் போனதை உணர்ந்த அதிர்ச்சியிலேயே அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.