சென்னை : ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியா 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது.
ஆனால், கே எல் ராகுலின் குறிப்பிட்ட ஒரு ஓவர் ஆட்டத்தால் சரிவில் இருந்த இந்தியா மீண்டு வெற்றியை நோக்கி சென்றது.

இந்தியா 3 விக்கெட்களை இழந்து இருந்த போது, விராட் கோலி - கே எல் ராகுல் களத்தில் இருந்தனர். இருவரும் மிக மிக ஆமை வேகத்தில் ஆடி வந்தனர். 17 ஓவர்களின் போது இந்தியா 56 ரன்களே எடுத்து இருந்தது. அதாவது சரியாக 102 பந்துகளில் 56 ரன்கள். வீசப்பட்ட பந்துகளில் பாதிக்கு பாதி தான் ரன் ரேட் இருந்தது.
டெஸ்ட் மேட்ச் போன்ற ரன் ரேட் இது. அப்போது விராட் கோலி 55 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். கே எல் ராகுல் 37 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து இருந்தார். அதுவரை ஆஸ்திரேலிய அணி தங்களின் முக்கிய ஆயுதமான ஸ்பின்னர் ஆடம் ஜம்பாவை ஓவர் வீச அழைக்கவில்லை.
சரியாக 18வது ஓவரில் ஜம்பாவை இறக்கினார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்களை சாய்த்ததால் ஜம்பா வீசும் இந்த ஓவரில் என்ன நடக்குமோ என்ற அச்சம் இருந்தது.
போட்டியின் போக்கையே தீர்மானிக்கும் அந்த ஓவரை கே எல் ராகுல் இந்தியா வசமாக மாற்றினார். அந்த ஓவரில் மூன்று ஃபோர் அடித்தார் அவர். அது வரை ஆமை வேகத்தில் இருந்த இந்திய அணியின் றேன் ரேட் சற்று உயர்ந்தது. இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையும் வந்தது.
அதன் பின் விராட் கோலி - கே எல் ராகுல் டெஸ்ட் ஆட்டம் ஆடாமல் அவ்வப்போது பவுண்டரி அடிக்கத் துவங்கினர். கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், அப்போது இந்தியா வெற்றிக்கு அருகே வந்து விட்டது. ராகுல் கடைசி வரை களத்தில் நின்று 97 ரன்கள் குவித்தார்.
அந்த ஒரு ஓவரில் போட்டியை மாற்றினார் ராகுல். அந்த ஓவரிலும் இந்தியா ஆமை வேக ஆட்டம் ஆடி இருந்தால் நம்பிக்கை பெறாமல் அடுத்த சில ஓவர்களில் விக்கெட்டை இழந்து இருக்கவும் வாய்ப்பு இருந்தது. அதை மாற்றினார் ராகுல்.