
கோலி என்ன சும்மாவா!
ஏன்.. இந்திய அணியை கங்குலி நன்றாக வழி நடத்தவில்லையா? டிராவிட் அணியை தூக்கி நிறுத்தவில்லையா? ஏன்.. இப்போதிருக்கும் கோலி டாப் கிளாஸாக அணியை கொண்டு செல்லவில்லையா? உலக அரங்கில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்.1 ரேங்கிங்கில் இருந்தோமே! என்று நீங்கள் உரக்க கேட்கலாம். ஆனால், அனைத்திற்கும் இங்கு பதில் இருக்கிறது.

துணிச்சல் ஓவர்லோடட்
சூதாட்டம் உள்பட பல பிரச்சனைகளில் சிக்கி, இந்திய அணி சின்னாப்பின்னமாகிக் கொண்டிருந்த நேரம்.. அணியை வழிநடத்த யாருமின்றி தடுமாறியது இந்திய கிரிக்கெட் நிர்வாகம். அப்போது தன் கையை உயர்த்தி, "நான் இருக்கிறேன்" என்று தைரியமாக முன் வந்த ஒரு லீடர் கங்குலி. யெஸ்.. அவருக்கு அன்று அந்த ஒரு துணிச்சல் இருந்தது. மற்றவர்களிடம் இல்லாத துணிச்சல். அணியை வழிநடத்த தொடங்கினார். மினி உலகக் கோப்பை கைவசமானது. மழை காரணமாக இலங்கையுடன் பகிர்ந்து பெற நேரிட்டது.

பசுமையான நினைவுகள்
2003 உலகக் கோப்பை கங்குலி கேப்டன்சியின் உச்சம். தேறுமா, தேறாதா என்ற நிலையில் இருந்த இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றவர். யுவராஜ் சிங், ஷேவாக், ஜாகீர் கான், தோனி போன்ற மாபெரும் வீரர்களை அணியில் உருவாக்கியவர். ஆனால், கங்குலியின் இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பது உண்மை.. நிதர்சனம். இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். கங்குலியிடம் ஆக்ரோஷம் இருந்தது. அணியில் சச்சின், டிராவிட், சேவாக், கும்ப்ளே, லக்ஷ்மன், ஜாகீர், ஹர்பஜன் என்று டாப் மோஸ்ட் வீரர்கள் இருந்தாலும், ஒரு ஆஸ்திரேலியா போல், தென்னாப்பிரிக்கா போல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் நடந்தால், அதில் ஒன்றில் இந்திய அணி வெற்றிப் பெறும். அந்த ஒரு வெற்றிக்காக, ஒவ்வொரு இந்திய ரசிகனும் ஒவ்வொரு போட்டியையும் எதிர்நோக்கி டிவி முன்னாடி உட்கார நேரிடும். அதனால், அந்த போட்டியின் வெற்றி பசுமரத்தாணி போல் நச்சென பசுமையாக மனதில் பதிந்து விடும்.

தோனி எனும் மிரட்டல்
இப்படி பல ஓட்டைகள் நிறைந்த இந்திய அணி எனும் படகை, பட்டி பார்த்து டிங்கரிங் செய்து, புது எஞ்சின் இணைத்து, முன்னின்று வழிநடத்திச் சென்ற இடத்தில் தான் மகேந்திர சிங் தோனி வித்தியாசப்படுகிறார். கங்குலி ஆக்ரோஷமாக இருந்தாலும், இந்திய அணியை பார்த்து எதிரணி பயப்படவில்லை. சச்சினை பார்த்து பயந்தும் பயப்படாமல் இருந்தார்கள். 'சச்சினை சமாளித்துவிட்டால் ஆட்டம் நம் கையில்' என்ற நினைப்பே அதற்கு காரணம்.
Recommended Video

மீசையில் மண் ஒட்டாத குறை
ஆனால், இங்கு தோனியை பார்த்து பயந்தார்கள். தோனியின் அணியைப் பார்த்து பயந்தார்கள். எந்த நேரத்திலும் தோனி ஆட்டத்தை மாற்றிவிடுவார் என்ற பதட்டத்திலேயே இருந்தார்கள். வெறும் பேட்டிங்கில் மட்டுமல்ல, அவரது ஸ்டெம்பிங், கேப்டன்ஷிப், வியூகம், பவுலர்களின் ரொட்டேஷன் என்று அனைத்திலும் பயந்தார்கள். உள்ளூர ஒரு கலக்கத்துடன் மீசையில் மண் ஒட்டாத குறையாக ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளையும் இந்தியாவுக்கு எதிராக விளையாட வைத்த பெருமை கேப்டன் மகேந்திர சிங் தோனியை மட்டுமே சாரும். அங்கு தான் கங்குலியை விட மாறுபடுகிறார். வேறுபடுகிறார். தனித்து நிற்கிறார்.
உண்மையான தலைவன்
விராட் கோலி இன்று வெற்றி மேல் வெற்றியை குவித்து வரலாம். அதற்கு கங்குலி முதல், டிராவிட், கும்ப்ளே, தோனி என்ற பலர் விதைத்த விதைகளை இன்று கோலி அறுவடை செய்து கொண்டிருக்கிறார் என்று தைரியமாகச் சொல்லலாம். எதிரணி வீரர்கள் மத்தியில் தோனி விதைத்த பயம், இன்று கோலி காலத்திலும் பிசிறில்லாமல் தொடர்கிறது. இருக்கின்ற ஒரு விஷயத்தை அப்படியே பின்பற்றி ஜெயிப்பவனை தலைவன் என்ற பீடத்தில் வைக்க முடியாது. இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை மெல்ல மெல்ல மெருகூட்டி, வலிமையாக்கி, அசுரத்தனமாய் உருமாற்றி, வெற்றியடையச் செய்து, அதனை தன் சந்ததிகளுக்கும் கடத்திச் செல்பவனே உண்மையான தலைவன். அப்படிப்பட்ட ஒரு யுகத்திற்கான தலைவன் தான் மகேந்திர சிங் தோனி.


Click it and Unblock the Notifications











