சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எத்தனை போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2024 முதல் செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தற்போது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், அவர் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இந்த ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.

அந்த அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணியிலிருந்து விலகியிருக்கிறார். இந்த நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையை சரியாக கையாளக்கூடிய ஒரே நபர் முன்னாள் கேப்டன் தோனி தான் என்பதால், அவரை சிஎஸ்கே நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டை சிஎஸ்கே நிர்வாகம் அணியிலிருந்து நீக்கவில்லை. அவர் 2025 ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் தோனி மீதமுள்ள சிஎஸ்கே அணியின் லீக் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என வைத்துக்கொண்டால், மொத்தம் ஒன்பது போட்டிகளுக்கு அவர் கேப்டனாக செயல்படுவார்.
2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மொத்தமாக 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே ஐந்து போட்டிகளில் விளையாடி முடித்து இருக்கிறது. மீதமுள்ள ஒன்பது போட்டிகளில் தோனி கேப்டனாக செயல்படுவார். சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், அந்தப் போட்டிகளிலும் தோனியே கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.
தோனியின் கேப்டன்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றது. 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஐந்து ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி கோப்பை வென்றது. மேலும், தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.