மும்பை : வாழ்க்கையில் ஒருவன் எவ்வளவு அடி வாங்கினாலும் தன் உழைப்பால் மீண்டு வர முடியும் என்பதற்கு முகமது சமி ஒரு பெரிய எடுத்துக்காட்டாக விளங்கி இருக்கிறார்.தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர் சரிவு கண்ட முகமது சமி திடீரென்று உலக கோப்பையில் எவ்வாறு ஹீரோவாக மாறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளராக டெஸ்ட், ஒருநாள், டி 20 என திகழ்ந்த சமி திடீரென்று தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையால் கிரிக்கெட்டை முற்றிலும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தாம் பாசத்துடன் நேசித்து வந்த மனைவி திடீரென்று சமியிடம் விவாகரத்து கேட்டார். அது மட்டுமல்லாமல் சமியின் சொத்தில் பலவற்றை தமக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் நிற்காமல் சமி மனைவி அவர் மீது போலீசாரிடம் புகார் கொடுத்தார். மேலும் தன்னுடைய குழந்தையை சமி இடம் வழங்க மாட்டேன் என்று கூறினார்.
இதனால் முகமது சமி வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே இழந்து தடுமாறினார்.எனினும் தன்னுடைய தந்தையின் அரவணைப்பில் சமி தொடர்ந்து இருந்து வந்தார். தந்தை மட்டும் போதும் என வாழ்ந்து வந்த சமிக்கு அவருடைய தந்தையும் காலமானார். வாழ்க்கையே திசை தெரியாமல் இருந்தபோது அவருக்கு கிரிக்கெட் மட்டும்தான் நம்பிக்கையை கொடுத்தது.
தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என கூறியவுடன் ரவி சாஸ்திரி கொடுத்த ஒரே ஒரு அறிவுரையால் மட்டுமே முகமது சமி மீண்டும் கிரிக்கெட் பக்கம் வந்தார். உன் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை நீ சந்தித்தாலும் வாழ்க்கையின் மீது கோபமாக இருந்தாலும், அதை அனைத்தையும் உடற்பயிற்சி செய்து கிரிக்கெட்டில் அந்த கோபத்தை காட்டு என ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கினார்.
இதனை அடுத்து தன்னுடைய வாழ்க்கையில் சரிவை சந்திக்கும் போதெல்லாம் முகம்மது சமி அந்த கோபத்தை கிரிக்கெட்டில் காட்டத் தொடங்கினார். அதற்கு பலனாகவே அவரால் மீண்டும் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடிந்தது. எனினும் மீண்டும் முகமது சமிக்கு உடல் அளவில் காயம் ஏற்பட்டு பல போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார்.டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொதப்பியதால் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார்.
உடல் தகுதி இல்லாததால் பல போட்டிகளில் சமி வெளியேற்றப்பட்டார் உடல் தகுதியை மீட்டு வந்தாலும் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற காரணத்திற்காக ஓரங்கட்டப்பட்டார். அவ்வளவு ஏன் நடப்பாண்டில் சிறப்பாக பந்து வீசியும் உலகக்கோப்பை தொடரில் சமிக்கு முதலில் வாய்ப்பை கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறியதை அடுத்து வேறு வழியின்றி சமியை ரோகித் சர்மா அணிக்குள் கொண்டு வந்தார்.
ஆனால் என்னை அணியில் இருந்து நீக்கியது தவறு என்பதை உணர்த்தும் வகையில் மூன்று போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையும் தற்போது சமி பெற்றிருக்கிறார். நம் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நமக்கு பிடித்த விஷயத்தை தொடர்ந்து வெறியுடன் நாம் செய்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு முகமது சமி ஒரு எடுத்துக்காட்டு.