சென்னை : இந்திய கிரிக்கெட்டில் தோனி 2004 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தாலும் சென்னைக்கு அவர் மிகவும் நெருக்கமானது ஐபிஎல் தொடருக்கு பிறகு தான். இந்திய அணிக்கு தோனி கேப்டனாகி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றினார். அப்போதெல்லாம் தோனியை அனைவருக்கும் பிடித்த வீரராக இருந்தாலும் தமிழகத்தின் தத்துப் பிள்ளையாக மாறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாறியது பிறகுதான்.

சென்னைக்கு தோனி விளையாடுகிறார் என்று செய்திகள் வந்தவுடன் தான் தோனி மீது ஒரு தனி பாசமே தமிழக மக்களுக்கு உண்டானது. ஆனால் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியே வந்திருக்க மாட்டார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஐபிஎல் ஏலம் முதல்முறையாக நடைபெற்ற போது சிஎஸ்கே அணியின் நிறுவனர் சீனிவாசன் அப்போதைய அதிரடி வீரர் சேவாக்கை தான் தனது அணியில் எடுக்க வேண்டும் என தீவிரமாக இருந்தாராம்.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் சேவாக் டெல்லி அணியின் பிரதிநிதியாக தான் இருப்பார். நம் தமிழகத்திற்கு என்று ஒரு கிரிக்கெட் முகம் வேண்டும்.அது தோனியாக இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். மேலும் தோனியை தமக்கு நீண்ட காலமாக தெரியும் என்பதால் சிஎஸ்கே வின் எதிர்காலமாக தோனி தான் இருப்பார் என்று சீனிவாசன் இடம் விபி சந்திரசேகர் முறையிட்டு இருக்கிறார்.
அப்போது சீனிவாசன் தோனிக்கு தான் ஒரு மில்லியன் வரை செலவழிக்க அனுமதி தருவேன் என்று கூறி இருக்கிறார். முதலில் ஓகே என்று சொல்லிவிட்ட வி பி சந்திரசேகர் பிறகு 1.6 மில்லியன் வரை தோனிக்கு அதிக பணம் கொடுத்து எடுத்திருக்கிறார். சீனிவாசன் எடுத்திருந்த முடிவுப்படி சென்றிருந்தால் இந்நேரம் தோனிக்கும் சிஎஸ்கேவுக்கும் தொடர்பே இல்லாமல் போயிருக்கும். நல்ல வேலையாக சந்திரசேகர் எடுத்த அந்த பிடிவாதமான முடிவுதான் தோனியை சென்னைக்கு கொண்டு சென்றது.
இதேபோன்று தோனி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதும் சென்னையில் தான். இதனால் தோனிக்கு சென்னை மீது தனி மரியாதை இருந்தது. சென்னை ரசிகர்களின் பாசத்தையும் கிரிக்கெட் அறிவையும் பார்த்து அசந்த தோனி மெதுமெதுவாக சென்னை பையனாகவே மாறிவிட்டார். மேலும் சீனிவாசனின் அதீத ஆதரவும் நம்பிக்கையும் தோனிக்கு பக்க பலமாக இருந்தது. அதன் பிறகு சிஎஸ்கே என்றால் தோனி தான் என்ற நிலை மாறிவிட்டது.