மும்பை: ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கான பணத்தை சம்பளமாக பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஐபிஎல் தொடரில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் அம்பயர்களின் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிப் பார்க்கலாம்.
உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அம்பயராக இருப்பது மிகவும் அழுத்தமான பணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதைவிட மிகவும் அழுத்தமான சூழ்நிலையை ஐபிஎல் தொடர் அம்பயர்களுக்கு அளித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அம்பயர்களின் முடிவுகள் கடும் சர்ச்சையாக மாறி வருவது வாடிக்கையாக உள்ளது. இப்படி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அம்பயர்களின் சம்பளம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகராகவே இருக்கிறது. ஆனால், அது போதுமா? என்ற கேள்வியும் உள்ளது.
ஐபிஎல் தொடரில் இப்போது இந்திய அம்பயர்களே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் ஆகியவற்றில் அம்பயர்களாகப் பணிபுரிந்து வருபவர்கள். சிலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அம்பயர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் நான்கு நாள் போட்டியான ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு ஒரு அம்பயருக்கு ஒரு நாளுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது. அதாவது ஒரு 4 நாள் ரஞ்சி போட்டிக்கு ஒரு அம்பயருக்கு சுமார் 1.6 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு மட்டுமே களத்தில் நிற்கும் அம்பயருக்கு மூன்று லட்ச ரூபாய் சம்பளமாக அளிக்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது அம்பயருக்கு இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது. அனைத்து அம்பயர்களும் சுழற்சி முறையில் ஆடுகளத்தில் நிற்கும் அம்பயர்களாகவும் பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது அம்பயர்களாகவும் செயல்படுவார்கள்.
இது கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு ஆட அளிக்கப்படும் சம்பளத்தை விட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முதல், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு 7.5 லட்ச ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு அளவில் அம்பயர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது.
தற்போது அம்பயர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் செய்யும் விமர்சனங்களாலும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. அவர்கள் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு மேலும் அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்ற பார்வையும் உள்ளது.