மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ரோகித் சர்மா காப்பாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக் கோப்பை தோல்வி,டி20 உலக கோப்பை தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி என ரோகித் சர்மா தொடர்ந்து மூன்று தொடர்களில் மண்ணை கவ்வினார்.
இதன் காரணமாக ரோகித் சர்மாவை கேப்டன் பகுதியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. எனினும் தோனி மாடலை பின்பற்றி ரோகித் சர்மா கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பையை தோனி வென்ற பிறகு தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இங்கிலாந்தில் தொடர்ந்து நான்கு டெஸ்டில் தோல்வி, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து நான்கு டெஸ்டில் தோல்வி என இந்திய அணி அடி பாதாளத்திற்கு சென்றது. அப்போது தோனியை கேப்டன் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று அப்போதைய தேர்வு குழு தலைவராக இருந்த ஸ்ரீகாந்த் முடிவெடுத்தார்.
இதற்காக கூட்டம் கூடுவதற்கு முன்பே ஒட்டுமொத்த தேர்வு குழுவினரையும் பிசிசிஐ தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் கலைத்தார். இதன் மூலம் தோனி தன்னுடைய கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொண்டார். இதேபோல்தான் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தற்போது அது முடியாத காரியமாக மாறிவிட்டது. இதற்கு காரணம் ரோகித் சர்மாவும் அஜித் அகார்கரும் மும்பையை சேர்ந்தவர்கள்.இன்னும் சொல்லப் போனால் அஜித் அகார்கர் உடன் ரோகித் சர்மா ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.
இதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு பாதகமாக எந்த ஒரு முடிவையும் அஜித் அகார்கர் எடுக்க மாட்டார். மேலும் ரோகித் சர்மா அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டி நினைக்கிறாரோ அதை செய்வதற்கு தான் தற்போது அஜித் அகார்கர் வந்திருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி காப்பாற்றப்பட்டது. டி20 போட்டியிலும் ரோகித் சர்மா தான் இனி கேப்டனாக நீடிப்பார் என்றும் தெரிகிறது. ஆனால் விராட் கோலி தனக்கு மேலே இருந்த அனைவரையும், தனக்கு கீழே இருந்த அனைவரையும் எதிர்த்து கொண்டார்.
இதன் மூலம் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். விராட் கோலியும் தனக்கு வேண்டிய ஆட்களை தேர்வு குழுவில் வைத்திருந்தால் இந்நேரம் அவர் கேப்டன் ஆக தொடர்ந்திருப்பார். தோனியும் ரோகித் சர்மாவும் செய்த விஷயத்தை விராட் கோலி மேற்கொள்ள தவறி விட்டார். கிரிக்கெட் நுணுக்கங்கள் தெரிந்த அளவுக்கு விராட் கோலிக்கு அரசியல் நுணுக்கங்கள் தெரியவில்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.