"வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்த ஒரே வழி இதுதான்..".. ஹர்பஜன் சிங் சொன்ன அட்டாக் மாஸ்டர் பிளான்
மும்பை: இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் பயமின்றி எதிர்கொண்ட நிலையில், அவரை வீழ்த்துவதற்கான ஒரு புதிய மாஸ்டர் பிளானை முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.
இது பற்றி பேசிய ஹர்பஜன் சிங், வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் தற்காப்பு ஆட்டத்தைக் கையாண்டால் அது தோல்வியில்தான் முடியும் என்று கூறினார். இது குறித்துப் பேசிய அவர், "அவரது ஷாட்களைப் பார்த்து நான் ஃபீல்டிங் அமைக்க மாட்டேன். எனது சொந்தத் திட்டத்தின் படியே ஃபீல்டிங் அமைப்பேன். ஒரு பந்துவீச்சாளர் வைபவுக்கு எதிராகப் பவுண்டரிகளைத் தவிர்க்கப் பார்த்தால், அந்தத் திட்டம் நிச்சயம் தோல்வியடையும். அவரை அவுட்டாக்க ஒரே வழி பந்துவீச்சாளரே ஆக்ரோஷமாகப் பந்துவீசித் தாக்குவதுதான்" என்று கூறினார்.

மேலும் பேசிய ஹர்பஜன் சிங், "இந்த ஆக்ரோஷமான திட்டத்தில் ஆபத்துகள் இருக்கலாம். அவர் எனது பந்தில் சிக்சர் அடிக்கலாம், ஆனால் எனது அடுத்த பந்தும் அதே ஆக்ரோஷமான திட்டப்படியே இருக்கும். பயந்து பந்துவீசினால் அவரை ஒருபோதும் அவுட்டாக்க முடியாது" என்று தெரிவித்தார்.
15 வயதான வைபவின் முதிர்ச்சியான ஆட்டம் பற்றி பேசிய ஹர்பஜன் சிங், "எனது வாழ்நாளில் இவ்வளவு சிறிய வயதில் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக மாறி வருகிறார். இவருக்கு எங்கு பந்துவீசுவது என்று தெரியாமல் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்" என்று கூறினார்.
2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, எந்தவொரு பெரிய பந்துவீச்சாளரின் பெயரையும் பார்த்துப் பயப்படாமல் ஆக்ரோஷமாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய சீனியர் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம் பெற்று, அங்கேயும் இரண்டு அதிரடி அரைசதங்களை விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
