டெல்லி : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற 13 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் சார்ட்ரான் 28 ரன்களும் ரஹ்மத் ஷா 3 ரன்களிலும், கேப்டன் ஹஸ்மத்துல்லா 14 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

எனினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி தொடக்க வீரர் குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதே போன்று நடு வரிசையில் இக்கிராம் அல்கில் 58 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 284 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜானி பாரிஸ்டோ 2 ரன்களிலும், நட்சத்திர வீரர் ஜோ ரூட் 11 ரன்களும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு டேவிட் மாலனுடன் இணைந்த ஹாரி புருக் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.
எனினும் முக்கியமான கட்டத்தில் டேவிட் மாலன் 32 ரன்கள் வெளியேற கேப்டன் ஜாஸ் பட்லர் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன் அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் 10 ரன்களிலும், ஷாம் கரன் 10 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். அணியை தனியாக காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புருக் 66 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆதில் ரசித் இறுதியில் 20 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் 215 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. நடப்பு உலக சாம்பியனாக களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானுடன் தோல்வியை தழுவி இருப்பது இந்த உலகக் கோப்பையின் முதல் அப்சட்டாக பார்க்கப்படுகிறது.