ஐதராபாத்: ஐசிசி உலகக்கோப்பைத் தொடரில் அக்.9 மற்றும் அக்.10 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் ஐதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளுக்கான தேதியை மாற்றம் செய்யுமாறு அம்மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கவுள்ள ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை ஜூன் மாத இறுதியில் மும்பையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.12ஆம் தேதி வரை லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்.15ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நவராத்திரி திருவிழா காரணமாக பின்னர் அக்.14ஆம் தேதி நடத்தப்படும் என்று தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி மட்டுமல்லாமல், 9 போட்டிகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டது. அதில் இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒன்றாகும்.
அதுமட்டுமல்லாமல் ஐதராபாத்தில் அக்.12ஆம் தேதி நடக்கவிருந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம், அக்.10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐதராபாத்தில் அக்.9ஆம் தேதி நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த இரு போட்டிகளையும் தேதி மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் இரு போட்டிகளை நடத்துவது சவாலானது என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் என்பதால் ஒரு போட்டியின் தேதியை மாற்றுமாறு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் சுமார் 45 நாட்களே உள்ள நிலையில், அட்டவணையை கூட பிசிசிஐ-யால் முழுமையாக இறுதி செய்ய முடியாத அளவிற்கு மோசமாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மற்ற நாடுகளில் எல்லாம் உலகக்கோப்பைத் தொடருக்கு ஒரு ஆண்டு முன்பாகவே அட்டவணை வெளியிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆனால் பிசிசிஐ நடத்தும் உலகக்கோப்பைத் தொடரில் கடைசி நேரத்தில் கூட அட்டவணையில் மாற்றம் செய்வது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.