ஹைதராபாத் : 2023 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த உள்ள நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் மைதானம் மோசமான நிலையில் இருப்பது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.
பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ள நிலையில், அந்த அணி ஹைதராபாத் மைதானத்தில் தான் அதிக போட்டிகளில் ஆட உள்ளது. கிட்டத்தட்ட ஹைதராபாத் மைதானம் பாகிஸ்தான் அணியின் சொந்த மைதானம் என்பது போல அவர்களுக்கு அங்கே ஆதரவும் சிறப்பாக உள்ளது.

பாகிஸ்தான் அணி ஆடிய இரண்டு பயிற்சிப் போட்டிகளும் கூட ஹைதராபாத் மைதானத்தில் தான் நடைபெற்றது. இந்த நிலையில், அந்த மைதானத்தின் இருக்கைகள் படு மோசமாக இருப்பது குறித்த புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து மோசமான விமர்சனங்களால் பிசிசிஐயை வறுத்து எடுத்து வருகின்றனர்.
ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பில் ஏற்கனவே பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதன் காரணமாக நிதி இல்லாமல் அந்த மைதானம் மட்டுமே இந்தியாவில் மோசமான நிலையில் உள்ளது. அதில் குறிப்பாக ஒரு பகுதியில் மட்டும் இருக்கைகள் புதுப்பிக்கப்படாமல் மிகவும் பழைய காலத்து இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த இடத்தை சரியாக பராமரிக்காத நிலையில், போட்டி இல்லாத நாட்களில் பறவைகள் அந்த இருக்கைகள் மீது அமர்ந்து எச்சமிட்டு வந்ததால் அந்த இருக்கைகள் படுமோசமாக உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் பயிற்சிப் போட்டியை காண வந்த ரசிகர்கள் அந்த இருக்கையில் எப்படி அமர்வது என அதிர்ச்சி அடைந்து அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் ஏன் முதல் பாகிஸ்தான் அணியின் முதல் பயிற்சிப் போட்டியின் போது வெளியாகவில்லை என்பதற்கும் ஒரு காரணம் உள்ளது.
பாகிஸ்தான் அணி தன் முதல் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்தப் போட்டி நடைபெற்ற போது ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று பார்க்க அனுமதி கொடுக்கப்படவில்லை.
அப்போது ஹைதராபாத்தில் உள்ளூர் விழாக்கள் இருந்ததால் காவல்துறை அந்தப் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க மறுத்ததால் ரசிகர்கள் இல்லாமல் அந்த போட்டி நடைபெற்றது. அதனால், அப்போது இந்த இருக்கைகள் விவகாரம் பேசுபொருள் ஆகவில்லை.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரசிகர்கள் வந்ததால் இந்த விவகாரம் வெளியாகி, பாகிஸ்தான் ரசிகர்கள் வரை சென்றுள்ளது. சில பாகிஸ்தான் ரசிகர்கள், உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ இப்படிப்பட்ட இருக்கைகளை கொண்ட இடத்திலா உலகக்கோப்பை தொடரை நடத்த உள்ளது என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அந்த இருக்கைகள் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இதே நிலையில் தான் உள்ளது. கடந்த ஆண்டே ரசிகர்கள் சர்வதேச போட்டியின் போதும், ஐபிஎல் தொடரின் போதும் ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் அந்த இருக்கைகளை படம் எடுத்து பகிர்ந்து இருந்தனர்.
ஹைதராபாத் கிரிக்கெட் நிர்வாகிகள் இப்போதாவது அந்த இருக்கைகளை சுத்தம் செய்வது அவர்களுக்கு நல்லது.