
இரு அணிகளும் ஒரு வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்தத் தொடர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ஏற்கனவே இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. அதன்பின் நடந்த முதல் டி-20 போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டியில் வெறும் 118 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது. இந்த நிலையில் யார் தொடரைக் கைப்பற்ற போவது என்ற கேள்வி எழுந்துள்ளதால் மூன்றாவது போட்டி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மாற்றம்
இந்திய அணி புதிதாக பெற்றிருக்கும் ஆல் ரவுண்டர் தான் ஹர்திக் பாண்டியா. கடந்த போட்டியில் 25 ரன்களை கடைசி நேரத்தில் அடித்து கெத்து காட்டிய பிளேயர். தற்போது முழு பார்மில் இருக்கும் இவர் கடைசியாக 7 வது இடத்தில் தான் இறங்கி வருகிறார். இவர் கொஞ்சம் சீக்கிரமாக இறங்கினால் அது இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர் இந்தப் போட்டியில் 4 வது இடத்தில் மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக இறக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் மழை
இந்த மூன்றாவது போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாகும். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் போட்டிக்கு மழை வந்து குறுக்க நிற்கிறது. கடந்த மூன்று நாட்களாக ஹைதராபாத்தில் தொடர் மழை பெய்து வருவதால் போட்டி நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்று காலையில் இருந்து ஹைதராபாத்தில் மழை பெய்யாமல் மேக மூட்டமான நிலை காணப்படுகிறது.
வித்தியாசமாக காயவைக்கும் முறை
ஹைதராபாத்தில் சிறிய அளவில் கூட சூரிய வெளிச்சம் இல்லாததால் மைதானத்தை காய வைக்க ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம் புதிய முறையை பயன்படுத்துகிறது. அதன்படி மைதானத்தில் ஈரம் இருக்கும் இடங்களில் எல்லாம் மூன்று மின்விசிறிகளை ஓட விட்டு காய வைத்திருக்கிறது. சரியான வெயில் இல்லாததால் இந்த மின்விசிறிகள் 24 மணிநேரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டோக்கள் டிவிட்டரில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications











