தர்மசாலா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது அனைவரின் கவனமும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா மீது தான் திரும்பி இருக்கிறது. ஏனென்றால் 22 வயது ஆவதற்குள் உலகக் கோப்பையில் இரண்டு மிகப்பெரிய சதத்தை அடித்து ரச்சின் ரவீந்திரா கலக்கியிருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 389 ரன்கள் என்று இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ரச்சின் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்தப் போட்டி பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவிடம் உங்களுடைய பெற்றோர்கள் இந்தியர்கள் என்பதால் உங்களுக்கு இந்தியாவில் விளையாடும் போது ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ரச்சின் ரவீந்தரா இதே கேள்வியை எத்தனை முறை நீங்கள் என்னிடம் கேட்பீர்கள் என்று கடுப்பாக பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் நான் எப்போதுமே நூறு சதவீதம் நியூசிலாந்து வீரர் தான். எனினும் என்னுடைய இந்திய வம்சாவளியை நினைத்து பெருமைப்படுகிறேன். இதனால் இந்தியாவில் விளையாடுவதை பெருமையாக தான் கருதுகிறேன்.
இந்த நாட்டில் தான் என்னுடைய பெற்றோர்கள் பிறந்து வளர்ந்து இருக்கிறார்கள். எங்களுடைய குடும்ப பின்புலமே இந்தியாவில் தான் இருக்கிறது. எனவே இந்தியாவில் உள்ள கள சூழல் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இங்கு பேட்டிங் செய்வது சுலபமாக இருக்கும். நான் இந்தியாவுக்கு வந்து பல தொடர்களில் விளையாடினேன். ஆனால் அப்போது என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினேன்.

ஆனால் தற்போது என்னுடைய பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு இருக்கிறேன். அதை நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் என் வாழ்நாளில் சிறந்த ரசிகர்கள் கூட்டம் முன் விளையாடி போட்டியாக நேற்றைய ஆட்டத்தை கருதுகிறேன். ஏனென்றால் நான் குழந்தையாக இருக்கும் போது பார்வையாளர்கள் என் பெயரை கூறி கத்த வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு நேற்று நிஜமானது. அது நிச்சயம் ஸ்பெஷலான தருணம் தான். எனினும் இந்த மகிழ்ச்சியில் மூழ்கி விடாமல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று ரச்சின் ரவீந்திரா கூறினார்.