பெங்களூரு: பைக் விபத்தில் நான் சிக்கி விட்டதாக வெளியான செய்திகள் வெறும் வதந்தியே என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் அக்தர் பைக் விபத்தில் சிக்கி விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அக்தர் விளக்கியுள்ளார்.

மஸக் மஸக் மெய்ன் என்ற டிவி ஷோவின்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் விபத்தில் அக்தர் சிக்கியதாக செய்திகள் வெளியாகிருந்தன. இந்தியாவிலும் சில ஊடகங்களில் இது வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தியே என்று அக்தர் மறுத்துள்ளார்.
நாளை தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள அக்தர் இதுகுறித்து டிவிட்டரில் கூறுகையில், அனைவரும் அமைதியாக இருங்கள். நான் நன்றாக இருக்கிறேன். எனது வீட்டில் இருக்கிறேன். எந்த பைக் விபத்தும் நடக்கவில்லை. சில ஊடகங்கள் கிளப்பிய கட்டுக்கதை இது என்று அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் விடுத்துள்ள டிவிட்டில் அனைவரும் அக்தருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லுமாறு கேட்டுள்ளார்.