மொஹாலி : நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக பஞ்சாப் மாநிலம் குர்டாஸ்பூர் தொகுதியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலங்களில் விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக விளையாட்டில் ஓய்வுபெற்ற வீரர்கள் கிரிக்கெட் தொடர்பான பணிகளை விடவும் அரசியலில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜக எம்பியாக உள்ளார். அதேபோல் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னே நேவால் பாஜகவில் இணைந்தார்.

இன்னொரு பக்கம் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்பியாக இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக விளையாடிய ஜார்க்கண்ட் கிரிக்கெட் வீரர் செளரப் திவாரியும் விரைவில் பாஜகவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மற்றொரு கிரிக்கெட் வீரர் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்திய அணிக்காக 2 உலகக்கோப்பையை வென்று கொடுத்த யுவராஜ் சிங் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தமிழ்நாட்டை போல் பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பிரபலமானவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சில வாரங்களுக்கு முன் இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங் சந்தித்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்டாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பாக யுவராஜ் சிங் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தொகுதியின் தற்போதைய எம்பியாக நடிகர் சன்னி டியோல் இருக்கிறார்.
இருப்பினும் யுவராஜ் சிங் நண்பர்கள் தரப்பில், நிதின் கட்கரி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் யுவராஜ் சிங் அரசியல் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், குர்டாஸ்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களுக்கு எனது யுவிகேன் தொண்டு நிறுவனம் மூலமாக தொடர்ந்து உதவிகள் செய்ய விரும்புகிறேன். அனைவரும் இணைந்து தங்களால் முடிந்த மாற்றங்களை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.