என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை டோணிக்கே சேரும்.. சொல்வது தென் ஆப்பிரிக்க கேப்டன்!
டெல்லி: என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை இந்திய அணி கேப்டன் டோணியை சேரும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் டி20 அணி, கேப்டன் பாப் டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் கேப்டனான டோணியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர் 2ம் தேதி முதல் டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இதையொட்டி தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டனர்.

டுப்ளசிஸ் புகழாரம்
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க டி20 அணிக்கான, கேப்டன் பாப் டுப்ளசிஸ் கூறியது: சென்னை அணிக்காக ஐந்து சீசன்களில் டோணி தலைமையின்கீழ் விளையாடியுள்ளேன். அந்த வகையில் என்னை ஒரு கிரிக்கெட் வீரராக வார்த்து எடுத்தது டோணியின் தலைமை.

கூல் கேப்டன்
எந்த ஒரு பதற்றமான நேரத்திலும் கூலாக இருக்கும் டோணியை பார்த்து வியந்துள்ளேன். டோணியிடமே இதுகுறித்து கேட்டுள்ளேன். டோணியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். டோணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

அதிருஷ்டம்
சென்னை அணியில், டோணி, பிரண்டன் மெக்கல்லம் உள்ளிட்டோருடன் இணைந்து ஆடியது சிறப்பான அனுபவம். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. டோணி தலைமையில் விளையாடியது என்னை பொருத்தளவில் அதிருஷ்டம். தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பலருக்கும் இந்திய மண்ணில் விளையாடி அனுபவம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளால்தான் இது சாத்தியப்பட்டது.

ஹஸ்சி இருக்கிறார்
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி எங்களின் உதவி ஊழியராக இருப்பது பெரும் மகிழ்ச்சி. மைக் ஹஸ்சி ஒரு சிறந்த ஜென்டில்மேன். இளைஞர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். ஹஸ்சியுடனும் சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. இவ்வாறு பாப் டுப்ளசிஸ் தெரிவித்தார். இன்று தென் ஆப்பிரிக்க அணி பயிற்சியாட்டம் ஒன்றில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications