எனக்கு டோணி பேட்டிங் பிடிக்கும்.. கோஹ்லி ஸ்டைலும் பிடிக்கும்.. "பலே" பாண்ட்யா!
ராஞ்சி: எனக்கு டோணி மற்றும் விராத் கோஹ்லி இருவரின் பேட்டிங்கும் பிடிக்கும். நான் சிறப்பாக ஆட முயற்சிப்பதே அவர்களது ஆட்டத்தைப் பார்த்துத்தான் என்று இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
நெருக்கடியான நேரங்களில் எப்படி பேட் செய்வது என்பதை இவர்களைப் பார்த்துதான் நான் கற்றுக் கொள்கிறேன் என்றும் பாண்ட்யா கூறியுள்ளார்.
4வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கும் நிலையில் பாண்ட்யா இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில கூறியிருப்பதாவது:

டோணி - கோஹ்லி
டோணி, கோஹ்லி இருவரும் இணைந்து பேட் செய்வதைப் பார்ப்பதே ஒரு விருந்து போலத்தான். இருவரும் இணைந்து பேட் செய்யும்போது நமக்கு கற்றுக் கொள்ள நிறைய கிடைக்கும். அவர்களது பேட்டிங், ஓடும் விதம் நமக்கு பெரும் உந்து சக்தியாக அமையும்.

அது வேற லெவல்
இருவரும் பேட் செய்வதைப் பார்ப்பது வேற மாதிரியான விசேஷமாகும். வேடிக்கையாகவும் இருக்கும், கற்றுக் கொள்ளவும் நிறைய கிடைக்கும்.

டோணி அபாயகரமானவர்
டோணி 4வது இடத்திற்கு முன்னேறி ஆடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு நல்லதாக அமைந்தது. அது தொடர வேண்டும். அவரது பேட்டிங்கை நான் ரசித்துப் பார்த்தேன். ஒரு பேட்ஸ்மேனாக எந்த இடத்திலும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும். சூழலுக்கேற்ப விளையாட வேண்டும். இது அனைவரின் கடமையும் கூட.

நான் ரெடி
என்னை எந்த இடத்தில் விளையாடச் சொன்னாலும் விளையாட நான் தயார்தான். எனது கடமையை நான் சிறப்பாக செய்ய முயற்சிப்பேன். எந்த ஓவர் கிடைத்தாலும், எத்தனை ஓவர் கிடைத்தாலும் கவலைப்படாமல் விளையாடுவேன். அது வீரர்களின் கடமையாகும்.

வலிமையாக இருக்கிறேன்
எனது முதல் ஒரு நாள் போட்டியில் நான் விக்கெட் வீழ்த்தியதும், ஆட்ட நாயகனாக தேர்வானதும் என்னை வலிமையாக்கியுள்ளது. மேலும் வலிமையாகியுள்ளதாக உணர்கிறேன். இன்னும் ஃபிட் ஆகியுள்ளதாக உணர்கிறேன்.

நம்பிக்கை நாயகன் கோஹ்லி
விராத் கோஹ்லி பேட்டிங் எங்களுக்கு உத்வேகம் தருகிறது. நம்பிக்கை தரும் வகையில் விளையாடக் கூடியவர் கோஹ்லி. அவர் ஃபுல் பார்மில் இருந்தால் அத்தனை பேருக்கும் அந்த எனர்ஜி பாயும். அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் கோஹ்லி என்றார் பாண்ட்யா.

முதல் முத்திரை
தரம்சலாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிதான் பாண்ட்யாவுக்கு முதல் போட்டியாகும். முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார் அவர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications