சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதான ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ரசித்து கரகோஷம் எழுப்பி ஆதரவு அளித்தது ஆச்சரியமாக இருப்பதாக தென்னாப்பிரிக்கா வீரர் தப்ரேஸ் ஷம்சி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐகானிக் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டி மட்டுமல்லாமல் சென்னையில் நடைபெற்ற 5 உலகக்கோப்பை போட்டியும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் வீர்ர்கள் நன்றி கூறியது வேறு எந்த மைதானத்தில் அரங்கேறாத சம்பவம்.

ஏனென்றால் எந்தவொரு அணியும் உலகக்கோப்பை தொடரின் முடிவில் தான் மைதானத்திற்கு வந்த ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறுவார்கள். ஆனால் சென்னை மைதானத்தில் விளையாடும் ஒவ்வொரு அணிகளும் ரசிகர்கள் அன்பையும், அவர்களின் ஆதரவை பற்றி பேசி நன்றி கூறி வருகின்றனர். இந்திய அணி விளையாடாத போட்டிகளுக்கும் ரசிகர்கள் ஆதரவளிப்பது தான் சேப்பாக்கம் மைதானத்தின் ஸ்பெஷலாக உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, கடைசி நேரத்தில் விக்கெட்டை காப்பற்றி தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் தப்ரேஸ் ஷம்சி. இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை பெற்ற பின் ஷம்சி பேசுகையில், சென்னை மைதானத்தில் விளையாடுவேன் என்பதை முன்பே கணித்திருந்தேன். அதேபோல் எனக்கு முன்பே சில விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.
அவர்கள் ஏற்படுத்திய அழுத்தத்தின் மூலம் நானும் விக்கெட் வீழ்த்தினேன். கிரிக்கெட்டில் ஏராளமான தருணங்களில் விளையாடி இருக்கிறேன். ஆனால் ஒரு போதும் கடைசி ஓவரில் பேட்டிங் செய்துவிட்டு நேர்காணல் அளிப்பேன் என்று கனவிலும் நினைத்தில்லை. இந்த போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது, மனதில் ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டேன். அது என்னவென்றால், நான் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தால், மீண்டும் ஓய்வறைக்குள் என்னை விட மாட்டார்கள். அதனால் எனது சிந்தனையெல்லாம் கேசவ் மகாராஜுக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னை ரசிகர்கள் பற்றிய கேள்விக்கு, நான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக விளையாடுகிறேன். இங்குள்ள ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், ஆரவாரமும் அற்புதமாக இருந்தது. இங்கு தான் இரு அணிகளுக்கும் ஆதரவளிக்கும் ரசிகர்களை பார்க்க முடிகிறது. நாங்கள் கடைசி நேரத்தில் ஒவ்வொரு ரன் எடுக்கும் போது ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். அதேபோல் ஷாகின் அப்ரிடி விக்கெட் வீழ்த்திய போதும் ஆர்ப்பரித்தார்கள். சரியாக சொல்ல வேண்டும், சேப்பாக்கம் ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ரசித்து ஆதரவு அளித்தார்கள் என்று கூறியுள்ளார்.