லண்டன்: ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் அழுகையை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சிப்பதாக இங்கிலாந்து ஜாம்பவான் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வாழ்நாளில் யாரிடமும் இதுவரை உதவி கேட்டதில்லை என்று கூறியுள்ள அவர், தற்போது உதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் ஆண்ட்ரூ ஃபிளின்டாப். இதுவரை 79 டெஸ்ட் போட்டிகள், 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்தவர். 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 300க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஃபிளின்டாப் சில காலம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வந்தார். இதனிடையே 2022ஆம் ஆண்டு பிபிசி சார்பில் தயாரிக்கப்பட்ட டாப் கியர் என்ற ஆவணப் படத்தில் நடித்த போது, கார் விபத்து ஒன்றில் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் சிக்கினார். உயிர் பிழைப்பாரா என்று பலரும் சோகத்தில் இருந்த நிலையில், மருத்துவர்களை ஃபிளின்டாபை பழைய நிலைக்கு கொண்டு வந்தனர்.
இதன் அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார். இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, வீட்டை விட்டு வெளியில் வந்து தங்குவதற்கு அச்சமடைந்து வராமல் தவிர்த்தார். இந்த நிலையில் ஃபிரெடி ஃபிளின்டாப் ஃபீல்ட் ஆஃப் டிரீம்ஸ் தொடரில் ஃபிளின்டாப் பேசுகையில், எனக்கு நடந்த விபத்திற்கு பின் மீண்டும் உயிருடன் இருப்பேனா என்று சந்தேகம் இருந்தது.
தற்போது என்னை நினைத்து நானே வருத்தப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன். தற்போதும் கூட எனக்குள் பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. விபத்தில் சிக்கிய காட்சிகள் கண்களை மூடினால் ஃபிளாஷ்பேக்காக வருகிறது. இதனை சமாளிக்க முடியவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால், கடைசி வரை என்னால் வாழ்க்கையை வாழ முடியாது. எனக்கு உதவி தேவைப்படுகிறது. வழக்கமாக யாரிடமும் உதவி கோரும் வீரர் நான் அல்ல.
தற்போது ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு இடையிலும் என் கண்ணில் இருந்து வரும் அழுகையை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியும் உயிருடன் இருப்பதை பாசிட்டிவாக எடுத்து கொள்ள முயற்சிக்கிறேன். இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. கொஞ்சம் எமோஷனலாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.