அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய பின்னர் தனக்கு தூக்கமே வரவில்லை என்று குஜராத் அணியின் பந்துவீச்சாளர் மோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய மோகித் சர்மா அழைக்கப்பட்டார். முதல் 4 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த மோகித் சர்மா, கடைசி 2 பந்துகளில் 10 ரன்களை விட்டுக் கொடுத்து அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் மோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மோகித் சர்மா 5வது பந்தை வீசுவதற்கு முன் பயிற்சியாளர் நெஹ்ரா, ஜெயந்த் யாதவ் மூலம் கொடுத்த ஆலோசனையே தோல்விக்கு காரணமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தோல்வி குறித்தும், நெஹ்ரா வழங்கிய ஆலோசனை குறித்தும் மோகித் சர்மா பேசியுள்ளார்.
இதுகுறித்து குஜராத் அணியின் மோகித் சர்மா பேசுகையில், கடைசி 2 பந்துகளை மோசமாக வீசியதால் எனக்கு தூக்கமே வரவில்லை. இந்த பந்தை வீசியிருந்தால் என்ன நடந்திருக்கும், அந்த பந்தை வீசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றே மூளை சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இது சரியான உணர்வு அல்ல என்பது தெரியும். இந்த உணர்வில் இருந்து விடுபட விரும்புகிறேன். கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்ட போது எனது திட்டத்தில் நான் சரியாக இருந்தேன்.

இதுபோன்ற தருணங்களில் பந்துவீசுவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். அனைத்து பந்துகளையும் யார்க்கராக வீசுவதே என் திட்டமாகவும், எண்ணமாகவும் இருந்தது. அதனையே கேப்டன், பயிற்சியாளரிடம் கூறினேன். 4 பந்துகளுக்கு பின் எனது திட்டம் என்ன என்று மீண்டும் கேட்கப்பட்டது. அப்போது நான் மீண்டும் யார்க்கரை வீசப்போவதாக சொன்னேன். ஆனால் நான் வீசிய 5வது பந்து எங்கு பிட்ச் ஆகக்கூடாது என்று நினைத்தேனோ, சரியாக அந்த இடத்தில் பிட்சானது என்று தெரிவித்துள்ளார்.
மோகித் சர்மாவின் பேட்டி மூலம் குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் 4 மற்றும் 5 ஆகிய பந்துகளுக்கு இடையிலான சில நிமிடங்கள் இடைவெளி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.