இசையை விரும்புவர்
மேற்கிந்திய தீவுகளின் வீரர் பிராவோ. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக அவர் சென்னை அணியில் விளையாடி வருவதால் அங்குள்ள கலாச்சாரம், உணவு வகைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மேலும் பிராவோ ஒரு இசைப்பிரியர். நடனம் ஆடுவதிலும் வல்லவர்.
ரஜினியை சந்திக்க வேண்டும்
அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினிகாந்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் நான் அவரது ஒரு படத்தை கூட இதுவரை நான் பார்க்கவில்லை.
பாடகரான பிராவோ
விரைவில் அந்த படங்களை பார்ப்பேன். ரஜினிகாந்தை சந்திக்க நான் விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் சந்திக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏற்கனவே ‘சித்திரம் பேசுதடி 2' என்ற தமிழ் படத்தில் பாடி இருக்கிறேன். அது தமிழில் எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகும்.
டுவிட் செய்வேன்
அந்த பாடல் இன்னும் எனக்குள் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன். தமிழ் படத்தில் நான் நடிப்பதற்கான பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர், தமிழில் ‘டுவிட்' செய்வதுபோல் நானும் விரைவில் தமிழை கற்றுக்கொண்டு டுவிட் செய்வேன் என்றார். நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.