கராச்சி: பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி நியமிக்கப்பட்டதற்கு பின்னால் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் லாபி இருப்பதாக எழுந்த பேச்சுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்து வெளியேறியது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் விலக, அவரை தொடர்ந்து பவுலிங் பயிற்சியாளர் மோர்கல் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒட்டுமொத்தமாக கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதன்பின் பாகிஸ்தான் அணியின் இயக்குநராக முகமது ஹஃபீஸ் அறிவிக்கப்பட்டார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் ஷாகித் அப்ரிடியின் தலையீடு காரணமாகவே ஷாகின் அப்ரிடிக்கு கேப்னசி வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து முன்னாள் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி பேசுகையில், கேப்டன்சி போன்ற முடிவுகளில் என்னால் தலையிட முடியாது. ஏனென்றால் ஷாகின் அப்ரிடியை கேப்டன்சிக்கு தள்ளியிருந்தால், மக்கள் மத்தியில் என்ன பேசுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் என் மகளை ஷாகின் அப்ரிடிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.
ஒருவேளை ஷாகின் அப்ரிடிக்காக நான் லாபி செய்திருந்தால், பிசிபி தலைவரை ஏன் நான் விமர்சிக்க வேண்டும். நான் ஒருபோதும் ஷாகின் அப்ரிடிக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும் என்று அவரை முன் நிறுத்தியதே இல்லை. பாகிஸ்தான் பிரதமர் கேப்டன் பிரச்சனை குறித்து அவரது பார்வையை கூறியிருந்தார். ஆனால் என்னை பொறுத்தவரை கேப்டன்சி மாற்றம் என்பது தேவையில்லாத ஒன்று.
பாபர் அசாமை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வர தேவையில்லை. அதேபோல் கேப்டனை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் முகமது ரிஸ்வான் தான். அதேபோல் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் மற்றும் டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடியை நியமனம் செய்தது புதிய இயக்குநர் முகமது ஷஃபீஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.