சென்னை: சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் எந்த மோதலும் இல்லை என்று சிஇஒ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். இதனால் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ஜடேஜா நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு, சென்னை அணியை விட்டு ஜடேஜா வெளியேறப் போகிறார், ஜடேஜாவின் ஆட்டத்திற்கு போதுமான பாராட்டு கிடைக்கவில்லை என்று ஏராளமான தகவல்கள் ரசிகர்களிடையே நிலவி வந்தது. அந்த கருத்துகள் அனைத்தையும் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மறுத்ததோடு, தெளிவான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில், அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா மிகச்சிறப்பாக பந்துவீசினார். பேட்டிங் என்று பார்த்தோமென்றால் ருதுராஜ், கான்வே, மொயின் அலி, ரஹானே என்று நீண்ட வரிசை இருந்தது. இதனால் ஜடேஜா பேட்டிங் இறங்கும் போது 5 முதல் 10 பந்துகள் மட்டுமே மீதமிருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சில ஆட்டங்கள் சிறப்பாக அமையும். சில நேரங்களில் அவ்வளவு சரியாக அமையாது.
இந்த சீசனில் அவருக்கு பின் தோனி களமிறங்குவார் என்பது ஜடேஜாவுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் எப்போதெல்லாம் ஜடேஜா களமிறங்குகிறாரோ, அப்போதெல்லாம் ரசிகர்கள் தோனி களமிறங்க வேண்டும் என்ற ஆசையில் கோஷங்கள் எழுப்பினார்கள். அதனால் ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டதால், அவர் நிச்சயம் வருத்தமடைந்திருக்க வேண்டும். அந்த சூழலில் எந்த வீரருக்கும் அதிகமான அழுத்தம் இருக்கும். ஆனால் ஜடேஜா ஒருபோதும் புகாராக அதனை கூறவே இல்லை.
அது விளையாட்டின் ஒரு பகுதியே. கடைசி போட்டிக்கு பின் நான் ஜடேஜாவை சமாதானம் செய்ததாக நினைத்துக் கொண்டார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருவருமே போட்டியை பற்றியே பேசிக் கொண்டோம். அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. அணிக்குள் எந்த வீரருக்கும் யாருடனும் பிரச்சனை இல்லை. தோனி மீது ஜடேஜாவுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. இறுதிப்போட்டி முடிவடைந்த பின்னரும் கூட, தனது ஆட்டத்தை தோனிக்கு அர்ப்பணிப்பதாகவே ஜடேஜா கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.