ஜெய்ப்பூர்: எனது பயிற்சி முறைகள் பற்றி எந்த சோசியல் மீடியாவிலும் வெளிப்படையாக பதிவிட்டு தற்பெருமை கொள்ளாததே விமர்சனங்களுக்கு காரணமாக மாறிவிட்டதாக ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் முதல் வீரர் என்பதால் ரியான் பராக் மீது சிறு வயதிலேயே தேவைக்கு அதிகமான மீடியா வெளிச்சம் விழுந்தது. சிக்சர்கள் விளாசுவதிலும், ஃபீல்டிங்கிலும் கில்லியான ரியான் பராக், ராஜஸ்தான் அணியின் எதிர்கால வீரர்களில் மிக முக்கியமானவராக மாறிவிட்டார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் சோபிக்காததால், ரசிகர்களின் அதிக கிண்டலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் தியோதர் டிராபி தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசி மீண்டும் நல்ல ஃபார்முக்கு வந்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களின் கிண்டல் பற்றி ரியான் பராக் பேசுகையில், ரசிகர்கள் அனைவரும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதாக நினைப்பதே கஷ்டமாக இருக்கிறது. அசாம் மாநிலத்தில் இருந்து எந்த வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை. முதல்முறையாக நான் விளையாடி வருகிறேன், இன்னும் விளையாடப் போகிறேன்.
எனக்கான பயிற்சிகளில் நான் தீவிரமாக இருந்து வருகிறேன். எனக்கு நெருக்கமான இருப்பவர்களிடம் கூட நீங்கள் கேளுங்கள். அவையனைத்தும் நான் சோசியல் மீடியாவில் பதிவிடாததால் கவனிக்கப்படுவதில்லை. என்னைப் பற்றி எதுவும் தெரியாததால், அவரவர் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதனைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.
நான் எப்படி கிரிக்கெட் விளையாட தொடங்கினேனோ, அதேபோல் தான் எனது ஆட்டத்தை தொடரப் போகிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எனது ஆட்டம் எப்படி முடிவடைகிறது என்பது பற்றியும் கவலையில்லை. எனக்கு பிடித்தது போல் விளையாடுவதே என் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.