கண்டி: பும்ரா, சிராஜ் உள்ளிட்ட வீரர்களுடன் எனக்கு எந்த ஈகோவும் இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி நாளை நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தயாராக வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, பும்ரா மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்டோர் மீண்டும் ஒன்றாக இணைந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் முகமது ஷமியும், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு பின் முகமது சிராஜும் ஓய்வில் இருந்தனர். பும்ராவும் 10 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு பின் 3 நட்சத்திர வீரர்கள் மீண்டும் இணைந்து விளையாட உள்ளனர். இதனால் இந்திய பவுலிங் அட்டாக் வேறு லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் புதிய பந்தில் எந்த வீரர் வீசுவார், பழைய பந்தில் எந்த வீரர் பந்துவீசுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய வீரர் முகமது ஷமி பேசுகையில், இந்திய அணிக்காக எந்த சூழல்களிலும் எந்த ஓவரையும் வீச தயாராகவே இருக்கிறேன். புதிய பந்தாக இருந்தாலும், பழைய பந்தாக இருந்தாலும், எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் தயாராகவே இருக்கிறேன். அதேபோல் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் எனக்கு எந்த ஈகோவும் இல்லை.

அவர்கள் இருவருமே சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். யார் விளையாட வேண்டும், என்ன திட்டம் என்பதெல்லாம் அணி நிர்வாகத்தின் முடிவில் தான் உள்ளது. என்னுடைய இலக்கு எப்போதும் களத்தில் 100 சதவிகிதம் உழைப்பை கொடுப்பது தான். அதில் கவனம் செலுத்தி, எங்களின் திட்டத்தை களத்தில் செயல்படுத்த நினைக்கிறோம். வெள்ளை பந்து, சிவப்பு பந்து என்றெல்லாம் இல்லை. சரியான லெந்தில் பிட்ச் செய்தால், எந்த பந்திலும் சிறப்பாக பந்துவீச முடியும்.
பெரிய தொடர்களுக்கு முன் நல்ல பயிற்சி அவசியம் என்று நினைக்கிறேன். அதற்காகவே பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. எங்களிடம் திறமையும், நல்ல பவுலர்களும் இருக்கிறார்கள். அதனால் அதிகமாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை கவனத்தை சிதறவிடக் கூடாது. கவனம் சிதறாமல் சரியான திட்டத்தை செயல்படுத்தினால் வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.