லண்டன்: இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று இளம் வீரர் பிரித்வி ஷா பேசி இருக்கிறார்.
ஊக்கமருந்து சர்ச்சையால் 9 மாதங்கள் தடை, ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது, யூடியூபர் சப்னா கில் உடனான மோதல் என்று கடந்த சில ஆண்டுகளாக பிரித்வி ஷா சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதற்கான தெளிவான விளக்கங்களை கூட பிரித்வி ஷா இதுவரை அளிக்கவில்லை.

களத்தில் வெளியே மட்டுமல்லாமல் களத்திலும் கூட பல்வேறு சர்ச்சைகளில் பிரித்வி ஷா சிக்கினார். இதனால் திறமை இருந்தும் இன்னொரு வினோத் காம்ப்ளியாக பிரித்வி ஷா மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்தின் நார்த்தம்டைன்ஷையர் அணிக்காக களமிறங்கிய பிரித்வி ஷ, 153 பந்துகளில் 244 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
மொத்தமாக 11 சிக்சர்கள், 28 பவுண்டரி என்று மைதானத்தில் சூறாவளியால் சுழன்றடித்துள்ளார். இதனால் பிரித்வி ஷான் கம்பேக் வெகு விரைவில் இருக்கும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பிரித்வி ஷா பேசுகையில், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போது, ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணம் கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் சிலர் இந்திய அணியில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு எனது ஃபிட்னஸ்தான் காரணம் என்று கூறினர்.
ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள அனைத்து ஃபிட்னஸ் டெஸ்டிலும் வெற்றிபெற்றிருக்கிறேன். அதன்பின்னரும் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் இடம்பிடித்தேன். ஆனால் ஐபிஎல் தொடருக்கு பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறேன். இதற்காக யாருடனும் சண்டை போட முடியாது.
எனது கடின உழைப்பு அனைத்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று குறிக்கோளுக்காக தான். இந்திய அணிக்காக 12 முதல் 14 ஆண்டுகளாவது விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே என் கனவு என்று கூறியுள்ளார்.