மும்பை: இந்தியாவில் சினிமா, அரசியல் ஆகியவற்றை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டிலும் வாரிசுகள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சுனில் கவாஸ்கர் மகன் ரோஹன் கவாஸ்கர் தொடங்கி தற்போது ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் வரை விளையாடி வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் கூட சச்சினின் மகன் என்பதால் மும்பை அணி நிர்வாகம் அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை விலைக்கு வாங்கி வருகிறது.
ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை வாரிசுகள் வெல்வது எளிதான விஷயமல்ல. அந்த வகையில் இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் யோக்ராஜ் சிங்கின் மகன் யுவராஜ் சிங் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார். உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் கோப்பை என்று யுவராஜ் சிங் வெல்லாத கோப்பைகளே கிடையாது.

புற்றுநோய் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் ஏராளமான சாதனைகளை யுவராஜ் சிங் படைத்திருப்பார். 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், தற்போது ஜூனியர் வீரர்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் யுவராஜ் சிங்கின் பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான்.
இந்த நிலையில் 3வது தலைமுறையாக யுவராஜ் சிங்கின் மகன் ஓரியனையும் கிரிக்கெட் பக்கம் களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் யுவராஜ் சிங் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது மகன் கிரிக்கெட்டை வாழ்க்கையாக கொள்வதை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுவராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில், மகன் ஓரியன் வேகமாக வளர்ந்து வருகிறார். நான் கிரிக்கெட் விளையாடுவதை அவர் அடிக்கடி பார்க்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவரை பார்க்கும் போது, அப்பா.. உங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பார்.. அப்போதெல்லாம் என் மனதிற்குள்.. வேண்டாம்டா தம்பி..
நீ கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு விருப்பமில்லை என்று மனதிற்குள் நினைத்து கொள்வேன். அவர் கிரிக்கெட் பக்கம் வரக் கூடாது என்பதே என் ஆசை. ஒருவேளை அவர் கிரிக்கெட் விளையாட விரும்பினால், நிச்சயம் ஆதரவு அளிப்பேன். ஒருபோதும் தடையாக இருக்க மாட்டேன். ஏன் வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால், குழந்தையாக இருக்கும் போதே அவர் மீது அதிக அழுத்தம் உருவாகும்.
ஏனென்றால் அவரின் ஆட்டம் என்னுடன் ஒப்பிடப்படும். தந்தையின் புகழை காப்பாற்ற வேண்டிய அழுத்தம் உருவாகக்கூடும். அது ஒருபோதும் சரியல்ல. உலகின் தந்தைக்கு இருக்கும் திறமை மகனுக்கும் இருக்கும் என்று கிடையாது. ஒருவேளை கிரிக்கெட் விளையாட விரும்பினால், அனைத்து வகையிலும் நான் ஆதரவாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.