மொஹாலி: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருப்பதாக இந்திய அணியின் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி பவர் பிளே, மிடில் ஓவர் மற்றும் டெத் ஓவர் என்று ஆட்டத்தின் அனைத்து நேரங்களிலும் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மொஹாலியில் கடுமையான வெயில் அடித்த போதும், 4 முதல் 5 ஓவர்கள் வரை ஒரே ஸ்பெல்லில் வீசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் 2013ஆம் ஆண்டு முதல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார் முகமது ஷமி. இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி, 165 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய வீரர்களில் 92 போட்டிகளில் விளையாடிய வீரர்களிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷமி தான்.
இந்த நிலையில் பவுலிங்கில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய ஷமிக்கு, ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முகமது ஷமி பேசுகையில், நீண்ட ஸ்பெல்லை வீசுவது சூழல் மற்றும் கேப்டனை பொறுத்தது தான். அதிக வெப்பம் இருந்த போதும், 4 முதல் 5 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசலாம் என்றே உணர்ந்தேன். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
எனது பவுலிங்கை பொறுத்தவரை, முதல் ஓவரில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை அதிகமாக ரசித்ய்தேன். ஸ்விங்கை கட்டுப்படுத்தி அவுட் சைட் எட்ஜாகி ஒரு பேட்ஸ்மேனை வீழ்த்துவது வேறு மாதிரியான மகிழ்ச்சியான உணர்வை கொடுக்கும். இந்த விக்கெட்டை பொறுத்தவரை சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும். அதேபோல் அதீத வேகத்தில் வீச வேண்டும் இல்லையென்றால் மிதமான வேகத்தில் பந்தை வீச வேண்டும். அப்போது தான் இந்த பிட்சில் விக்கெட் வீழ்த்த முடியும்.
நான் பும்ரா, சிராஜ், ஷர்துல் தாக்கூர் அனைவரும் நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறோம். அதனால் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றிருப்பதால், அடுத்தப் போட்டியிலும் சிராஜ் அல்லது பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.