பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், தனது காயம் பற்றியும் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றியும் பேசி இருக்கிறார்.
இந்திய அணிக்காக உள்ள பேட்ஸ்மேன்களில் மிடில் ஓவர்களிலும் ஸ்பின்னரை வெளுத்து வாங்கக் கூடிய வீரர் என்றால் அது ஸ்ரேயாஸ் ஐயர் தான். இதன் மூலம் இந்திய ஒருநாள் அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.

அதன்பின் ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கூட ஸ்ரேயாஸ் ஐயரால் இந்திய அணிக்கு திரும்பவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பைத் தொடரிலாவது கம்பேக் கொடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சந்தேகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆசியக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் முழு ஃபிட்னஸை எட்டியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியின் பயிற்சி முகாமில் வேற மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பிசிசிஐ டிவிக்கு பேட்டி கொடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், நான் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமலேயே சில போட்டிகளில் ஆடி வந்தேன். எனது பிரச்சனை பற்றி சரியாக சொல்ல வேண்டுமென்றால், நரம்பு சுருக்கம் இருந்தது.
அதன் வலி என் கால் விரல்களின் அடிப்பகுதி வரை இருந்தது. ஒரு கட்டத்தில் என்னால் காயத்தோடு போராட முடியவில்லை. அதன்பின்னர் தான் அறுவை சிகிச்சைக்கு தயாரானேன். இந்திய அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்தது உற்சாகமாக உள்ளது. இவ்வளவு வேகமாக காயத்தில் இருந்து குணமடைவேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் முழு ஃபிட்னஸ் உடன் மீண்டு வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஆசியக் கோப்பைத் தொடரின் சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 3 முதல் 4 ஓவர்கள் வரை வீச ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணி தயார்ப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.