குயானா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 44 பந்துகளில் 83 ரன்கள் விளாசி இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார். இதன் மூலம் சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். இருப்பினும் உலகக்கோப்பைத் தொடர் அருகில் இருக்கும் சூழலில், ஒருநாள் கிரிக்கெட்டில் சொதப்பி வருவது ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ஒருநாள் கிரிக்கெட் பற்றி உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனது ஆட்டம் மோசமாகவே இருக்கிறது. அதனை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் எனது ஆட்டம் பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது முன்னேற்றம் பற்றியும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும், நான் ஒருநாள் கிரிக்கெட்டை அதிகம் விளையாடவில்லை. அதனால் போதுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவிட்டு, மோசமாக விளையாடுவது பற்றி சிந்திக்குமாறு கூறியுள்ளனர். ஆட்டத்தின் கடைசி 10 முதல் 15 ஓவர்களில் நான் களமிறங்கும் போது, அணிக்காக என்ன செய்ய முடியும் என்று பார்க்க அறிவுறுத்தியுள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் நான் 15 முதல் 18 ஓவர்கள் வரை விளையாடினால், என்னால் 45 முதல் 50 பந்துகள் வரை விளையாட முடியும். அதனால் எனக்கான திட்டத்தை தெளிவாக கூறிவிட்டார்கள். இனி பொறுப்புடன் செயல்பட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது எனது கைகளில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 49 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,780 ரன்களை 174.33 ஸ்ட்ரைக் ரேட்டில் சூர்யகுமார் யாதவ் விளாசி இருக்கிறார். ஆனால் அப்படியே ஒருநாள் கிரிக்கெட்டில் பார்த்தால் 24 இன்னிங்ஸ்களில் வெறும் 511 ரன்களை 24.33 பேட்டிங் சராசரியுடன் சேர்த்திருக்கிறார். டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்துடன் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.