மும்பை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியும், என்னை விடுவிப்பது தொடர்பாக ஆர்சிபி நிர்வாகம் எந்த தகவலும் கூறவில்லை என்று சாஹல் கோபமாக கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 187 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் எந்த மைதானத்திலும் கட்டுக்கோப்புடன் பந்துவீசும் திறமை கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இவர், அந்த அணியின் மிகமுக்கிய வீரராக உள்ளார்.

ஆனால் ராஜஸ்தான் அணிக்கு முன்பாக பெங்களூரு அணியின் மதிப்பு வாய்ந்த வீரராக இருந்தவர் சாஹல். அனைத்து பந்துவீச்சாளர்களும் 40 ரன்களுக்கு குறையாமல் ரன்கள் விட்டுக் கொடுக்கும் போது, வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி வந்தவர். இதனால் ஆர்சிபி அணியின் நிரந்தர வீரராக பார்க்கப்பட்ட சாஹர், 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது விடுவிக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்காக விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சாஹல் பேசுகையில், பெங்களூரு அணிக்காக 110க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் 2022ஆம் ஆண்டு நான் விடுவிக்கப்பட்ட போது அர்சிபி நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை. மெகா ஏலத்தில் எனக்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என்று கூறினார்கள்.
ஆர்சிபி அணிக்காக கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக ஆடியும், என்னை மீண்டும் வாங்காததால் கோபமடைந்தேன். அந்த நேரத்தில் நான் அதிக தொகை கேட்டேன் என்றெல்லாம் வதந்தி பரவியது. ஆனால் அப்படி எதுவும் நான் கேட்கவில்லை. என் மதிப்பு என்னவென்று நன்றாக தெரியும். மெகா ஏலத்திற்கு பின் ஆர்சிபி அணியில் யாரிடமும் பேசவில்லை. ஆர்சிபி அணிக்கு எதிராக ஆடிய போது கூட, அந்த அணியின் பயிற்சியாளர்களிடம் நான் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் எப்போதும் சின்னசாமி மைதானம் தான் பிடித்தமானது. எனக்கு தெரிந்த வரை விராட் கோலி களத்தில் எவ்வளவு ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறாரோ, அதற்கு நேர்மாறாக களத்திற்கு வெளியில் அமைதியாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.