மும்பை: பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள ஒவ்வொரு நாளும் 100 முதல் 150 பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டதாக சிஎஸ்கே வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ள சிவம் துபே, ஆசியப் போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 14 இன்னிங்ஸ்களில் 418 ரன்களை விளாசிய சிவம் துபே, சென்னை அணிக்காக ஏராளமான போட்டிகளை வென்று கொடுத்தார். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய தோனி, சிவம் துபேவை சிறப்பாக பயன்படுத்தினார்.

இமாலய சிக்சர்களை விளாசும் திறமை கொண்ட சிவம் துபே, ஸ்பின்னர்களை வெளுத்துக் கட்டினார் என்றே சொல்லலாம். சிவம் துபேவிற்குள் இவ்வளவு திறமையா என்று ரசிகர்களே வியந்தனர். இதன் காரணமாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சிவம் துபே தேர்வு செய்யப்பட்டு விளையாடவும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக சிவம் துபே பயன்படுத்திக் கொண்டார்.
குறிப்பாக முன்பு போல் அல்லாமல் சிவம் துபே பவுன்சர் பந்துகளையும் சிறப்பாக எதிர்கொண்டார். இது பலருக்கும் ஆச்சரியமளித்தது. இதுகுறித்து சிவம் துபே பேசுகையில், 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் உடனடியாக எனக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அந்த அறிவுரைகளுக்கு ஏற்ப, உடனடியாக நான் என் பயிற்சிகளை தொடங்கினேன். உள்ளூர் போட்டிகள் இல்லாத நாட்களில் மொத்தமாக பந்துவீசும் மெஷினை வைத்து பவுன்சர் பந்துகளை எதிர்கொண்டேன்.
கடந்த ஐபிஎல் தொடரின் போது நான் காயமடைந்தேன். பவுன்சர் பிரச்சனைகளை தவிர்த்து மற்ற அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். ஆனால் காயத்திற்கு பின் ஒவ்வொரு நாளும் 100 முதல் 150 பவுன்சர் பந்துகளை தொடர்ச்சியாக மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை எதிர்கொள்ள பயிற்சி செய்தேன். அந்த பயிற்சியின் மூலமாக தான் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு பின் இந்திய அணியின் ஹிட்டர் + ஆல் ரவுண்டராக சிவம் துபே பார்க்கப்பட்டு வருகிறார். எந்த அளவிற்கு பேட்டிங்கில் கவனம் செலுத்துகிறாரோ, அதேபோல் பவுலிங்கிலும் கவனம் செலுத்தினால் இந்திய டி20 அணியில் நிரந்தர இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.