பெங்களூர்: சிறுவயதில் பயிற்சியை முடித்த பின் ஒரு கிளாஸ் பால் மற்றும் 2 முட்டைக்காக காத்திருந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பகிர்ந்துள்ளார். அதேபோல் இந்தியா முழுவதும் திறமையான வீரர்கள் உருவாகும் போது, அவர்களை திறமையை வளர்ப்பதற்கான பயிற்சி மையங்களும் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு காரணமாக அமைந்தவர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இதன் மூலமாக 11 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்தது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பொறுப்பு நிறைவுக்கு வந்தது.

அதன்பின் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மவுண்ட் ஜாய் கிரிக்கெட் கிளப்பின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். அப்போது ராகுல் டிராவிட் பேசுகையில், இந்திய கிரிக்கெட் தான் இன்று உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.
அதற்கான முக்கியமான காரணமென்றால், திறமையான வீரர்கள் இந்தியா முழுக்க இருந்து கொண்டு வரப்படுகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஜிஆர் விஸ்வநாத் காலத்திலயோ அல்லது நான் அறிமுகமான காலத்தில் பார்த்தால், பெரிய நகரங்களில் இருந்து மட்டும் தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடுவார்கள்.
சில முக்கியமான மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவார்கள். சிறிய நகரங்களிலோ அல்லது கிராமத்திலோ திறமையான வீரர்கள் இருந்தாலும், அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு பெரிய நகரங்களை நோக்கி வர வேண்டும். ஆனால் இந்திய அணியில் இன்று விளையாடும் வீரர்கள் நாட்டின் பல்வேறு திசைகளில் இருந்தும், சிறிய கிராமங்களில் இருந்தும் வரத் தொடங்கியுள்ளனர்.
ரஞ்சி டிராபி தொடரின் தரத்தை அனைவரும் கண்காணிக்க வேண்டும். எனது காலத்தில் தென் மண்டல அணிகளில் ஐதராபாத் அல்லது தமிழ்நாடு அணிகள் மட்டுமே தீவிரமாக விளையாடுவார்கள். மற்ற மாநில கிரிக்கெட் அணிகள் அவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்று தென் மண்டலத்தில் எந்த அணியையும் யாராலும் அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது.
இந்த நிலை தொடர வேண்டுமென்றால் கிளப் கிரிக்கெட் வலிமையாக இருக்க வேண்டும். அதேபோல் கிரிக்கெட் ஒரு சிலரின் கைகளுக்கு மட்டும் சென்றுவிடக் கூடாது. திறமைகள் அனைத்து இடங்களிலும் இருக்கும் போது, அதற்கு தேவையான சூழல்கள் ஒரு சில இடங்களில் மட்டும் இருக்க கூடாது. அதனை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அது ஆண்கள், பெண்கள் இரு தரப்புக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் விளையாடிய காலத்தில் நாங்கள் பயிற்சி முடித்த பின், 2 முட்டையும், ஒரு கிளாஸ் பாலும் வழங்கப்படும். பாலையும், முட்டையையும் வாங்குவதற்காக நான் தினமும் காத்திருப்பேன். அதற்கு காரணம் பாலும், முட்டையும் சாப்பிடுவதற்காக அல்ல. அங்கு அமர்ந்து பிகே குமார் மற்றும் நந்தன் இருவரும் கிரிக்கெட் குறித்து பேசுவதை கேட்பதற்காக தான். அவர்களின் பேச்சுகளை கேட்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.