மும்பை: பெங்கால் அணியைச் சேர்ந்த முகேஷ் குமார் 39 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அங்கிருந்து இராணி கோப்பை, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் என்று அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மாற்று வீரராகவும் முகேஷ் குமார் லண்டன் சென்றார். இவரின் செயல்பாடுகள் இந்திய அணியின் சீனியர் வீரர்களை ஈர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் யாருமே இல்லை.

இதனால் முகேஷ் குமார் டெஸ்ட் தொடரில் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து முகேஷ் குமார் பேசுகையில், இந்திய அணிக்கு தேர்வானதும் என் அம்மாவிடம் தான் முதலில் கூறினேன். பின்னர் என் அப்பாவின் புகைப்படத்தை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பு மிகப்பெரியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முகமது ஷமி என்னை இளைய சகோதரன் போல் நடத்தினார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏராளமான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அதேபோல் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போது, இஷாந்த் சர்மா கொடுத்த அறிவுரைகள் ஏராளம். ஒரு பிட்ச்சில் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும், என்ன லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும், மைதானத்தின் தன்மை உள்ளிட்ட ஏராளமானவற்றை கற்றுக் கொடுத்துள்ளார்.
நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக வீசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எப்போதுமே ஷமியும், இஷாந்த் சர்மாவும், டென்ஷனை தலைமையில் ஏற்றிக் கொள்ளாமல் விளையாடுமாறு அறிவுறுத்துவார்கள். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஐபிஎல் தொடரின் போது தோனியுடனான சந்திப்பு குறித்து முகேஷ் குமார் பேசுகையில், தோனியை நேரில் சந்தித்த போது 2 கேள்விகளை தான் கேட்டேன். அது, ஒரு கேப்டனாகவும், ஒரு விக்கெட் கீப்பராகவும் பந்துவீச்சாளர்களிடம் என்ன பேசுவீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் என் தோளில் கைபோட்டு, நாம் முயற்சிக்காத வரை எதையும் கற்றுக் கொள்ள முடியாது. நாம் என்ன செய்ய விரும்புகிறாயோ, அதனை சரியாக செய்ய வேண்டும்.
நாம் எதையும் முயற்சிக்காத வரை, எதையும் கற்றுக் கொள்ள முடியாது. முடிவுகளை பற்றி கவலைப்படாமல் என்ன செய்ய நினைக்கிறாயோ, அதை செய் என்று அறிவுறுத்தினார். இந்த விஷயத்தை மிக எளிமையாக என்னிடம் எடுத்துக் கூறினார். தோனி கூறியது சரியான அறிவுரையாக இருந்தது. நாம் செய்யும் செயலின் முடிவை பற்றி கவலை கொள்ளாமல் முயற்சிக்க வேண்டும் என்று முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.